முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், அறப்போர் இயக்கம் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனு மீதான இறுதி விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் அக்டோபர் 13 ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது
முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சி துறை அமைச்சராக பதவி வகித்த போது, சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில், 98 கோடியே 25 லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தனியார் நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, புகார்தாரரான அறப்போர் இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில், காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் பதில் மனுவில், டெண்டர் முறைகேடு வழக்கில் முன்னால் அமைச்சர் வேலுமணியின் பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு ஐ ஏ எஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர் மத்திய அரசின் அனுமதி கோரி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் பதில் மனுவுக்கு பதில் அளித்து அறப்போர் இயக்கம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பதில் அளிக்க காவல்துறை தரப்பில் அவகாசம் கோரியதையடுத்து இந்த வழக்கின் இறுதி விசாரணையை அக்டோபர் 13 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.