தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் பட்டியல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கட்சியின் தலைவர் விஜய் தனது நீண்டகால கார் ஓட்டுநரான ராஜேந்திரனின் மகன் சபரிநாதனுக்கு சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளார். மேடையில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன், சபரிநாதன் உணர்ச்சிவசப்பட்டு விஜய்யை கட்டியணைத்து கண்ணீர் சிந்தினார்.
தன்னிடம் பணிபுரிந்தவரின் மகனை ஒரு வேட்பாளராக உயர்த்தி அழகு பார்த்த விஜய், சபரிநாதனை அரவணைத்து ஆறுதல் கூறியது தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மறுபுறம், தவெகவின் வேட்பாளர் தேர்வில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. மொத்தமுள்ள தொகுதிகளில் 23 பெண் வேட்பாளர்களுக்கு விஜய் வாய்ப்பு வழங்கியுள்ளார். வெறும் பேச்சுடன் நிற்காமல், பெண்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் சட்டமன்றத் தேர்தலில் இத்தனை இடங்களை ஒதுக்கியிருப்பது கட்சியின் முற்போக்கான அணுகுமுறையாகப் பார்க்கப்படுகிறது. சாதாரண பின்னணி கொண்டவர்களுக்கு முக்கியத்துவம் அளித்தது மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தது என விஜய்யின் இந்தத் தேர்தல் வியூகம் தற்போது விவாதப் பொருளாகியுள்ளது.
