தவெக தலைவர் விஜய் சட்டமன்ற தேர்தலை ஒட்டி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் இன்று நாமக்கலில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்ற விஜய் அங்கிருந்து, சாலை மார்க்கமாக நாமக்கல் சென்றார்.
விஜய் வருகையை ஒட்டி வழிநெடுகிலும், பிரச்சாரம் நடைபெறும் இடத்திலும் மக்கள் அதிகளவில் குவிந்தனர். இந்த நிலையில் திருச்சியில் இருந்த பிரச்சார வாகனத்தில் நாமக்கல் நோக்கி விஜய் புறப்பட்டு சென்றார். அப்போது தொண்டர்கள், ரசிகர்கள், கட்சி நிர்வாகிகள், விஜய்யின் பவுன்சர்கள், செய்தியாளர்கள் என ஏராளமானோர் விஜய் வாகனத்தை பின் தொடர்ந்து சென்றனர்.
அப்போது விஜய்யின் வாகனத்தை பின் தொடர்ந்த பவுன்சர்களின் கார் விபத்தில் சிக்கியது. முன்னாள் சென்ற காரின் மீது பவுன்சர்கள் சென்ற கார் மோதியது. கார் முழுவதும் சேதமான நிலையில், பவுன்சர்கள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.