தேமுதிக, அமமுக, புதிய தமிழகம் கட்சிகளுடன் தமிழக வெற்றிக்கழகம் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில், தேர்தலை எதிர்கொள்ள வேண்டுமென்றால், கூட்டணி வைப்பது அவசியம் என்ற நிலை ஆகிவிட்டது. எம்.ஜி.ஆர், கருணாநிதி காலத்திற்குப் பிறகே, இங்கு கூட்டணி வைத்துதான் அந்த கட்சிகளே ஆட்சியை பிடித்துள்ளதை வரலாறு காட்டுகிறது. அதனால், பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக, கூட்டணி அமைத்தே தேர்தல்களை சந்தித்து வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் கட்சி தொடங்கிய விஜய், தனித்தே போட்டி என்பதை தான் கூறி வந்தார். ஆனால், தற்போது கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தொடங்கியுள்ளதாக தெரிகிறது.
ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கவது தொடர்பான சர்ச்சைகள் ஒருபக்கம் இருந்தாலும், அரசியல் களத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் விஜய். அதாவது, கரூர் கூட்டநெரிசல் சம்பவத்துக்கு பின் புதுச்சேரி, ஈரோட்டில் மாநாடு நடத்திய அவர், அடுத்ததாக, சேலம் அல்லது தருமபுரி மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு நடத்தவுள்ளதாக திட்டமிட்டுள்ளாராம்.
இருப்பினும் தேமுதிக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் பக்கம் இழுக்க அதிமுக- பாஜக கூட்டணியிலும், திமுகவிலும் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில், தேமுதிக, அமமுக, புதிய தமிழகம் கட்சிகளுடன் தவெக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, இது உறுதியானால், விஜய், பிரேமலதா, டிடிவி தினகரன், கிருஷ்ணசாமி ஆகியோர் ஒரே மேடையில் கூட்டணியை அறிவிப்பார்கள் என்றும் கூறப்படுப்படுகிறது.
