ராஜ்ய சபா எம்பி பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளதால், அதிமுகவுக்கு 2 ராஜ்ய சபா எம்.பி பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அதிமுக முக்கிய தலைகள் பலரும் ராஜ்ய சபா எம்.பி. பதவிக்கு முட்டிமோதி காய்களை நகர்த்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஆளும் திமுகவில் இருந்து 4, எதிர்க்கட்சியான அதிமுகவில் இருந்து ஒன்றும், அதிமுக கூட்டணியில் இருக்கும் தமிழ் மாநில காங்கிரஸுக்கு ஒன்றும் மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் என ராஜ்யசபாவில் மார்ச் 16 ஆம் தேதி தமிழகத்தின் சார்பில் 6 ராஜ்ய சபா எம்.பி. இடங்கள் காலியாகின்றன. அதிமுக சார்பில் ராஜ்ய சபா எம்.பி.க்களாக உள்ள தம்பிதுரை, ஜி.கே.வாசன் ஆகியோர் தங்கள் பதவிக்காலம் முடிவடைந்து ஓய்வு பெறுகின்றனர்.
ஏற்கனவே கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலின் போது தேமுதிகவிற்கு 2026 ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் ஒரு பதவி வழங்கப்படும் என்று கையெழுத்துப் போட்ட கடிதத்தை எடப்பாடி பழனிச்சாமி தேமுதிகவிடம் வழங்கியிருந்தார். அந்த வகையில் தேமுதிக கூட்டணிக்கு வரும் பட்சத்தில் தேமுதிகவிற்கு ஒரு இடம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அதிமுக அன்புமணி இடையே கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்ற போது 17 சட்டமன்றத் தொகுதிகள் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி என்று கூறியதாக தகவல் வெளியானது.
அப்படி பார்க்கும் பொழுது அதிமுக சார்பாக காலியாகும் இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேமுதிக மற்றும் பாமகவுக்கு வழங்குவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
சட்டப்பேரவையில் அதிமுக(62), பாமக(5), பாஜக(4) நிலவரப்படி அதிமுகவுக்கு 2 எம்.பி.க்கள் சீட் கிடைக்கும். இதில் தம்பிதுரை மீண்டும் சீட் கேட்கிறாராம். அதேபோல், அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள பாமக(அன்புமணி), ஒருவேளை கூட்டணிக்கு வந்தால் தேமுதிகவும் ஒரு எம்.பி. சீட்டை கேட்கிறதாம்.
