பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொ மு ச, ஐஎன்டியூசி, ஏஐடியூசி, ஹெச்எம்எஸ், சிஐடியு, ஏஐயுடியுசி, யுடியுசி, உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் சார்பில் நாடு முழுவதும் பொதுவேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டங்கள் நடைபெற்றது. மத்திய அரசைக் கண்டித்து நாடு தழுவிய போது வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக சென்னை அண்ணாசாலை தாராப்பூர் டவர் அருகே மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த சாலை மறியல் போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை, CPI மாநில செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு ஆதரவு அளித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, பாஜக ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்தே தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வருகிறது. தொழிலாளர்களின் உரிமைகளை பறித்து வருகிறது.. அதானி, அம்பானி ஆதரவாக இருக்கக்கூடிய பாஜக அரசு அவர்களின் தொழில் நிறுவனங்கள் செழிப்பதற்காக தொழிலாளர்களை அடக்கி ஒடுக்கி ஆள வேண்டும் என்று 44 சட்டங்களாக இருந்ததை நான்கு சட்டங்களாக குறைத்து இருக்கிறார்கள்.
அதானி, அம்பானி நிறுவனங்கள் இருக்கும் இடமெல்லாம் போராட்டங்கள் வெடிக்கின்றது. ஒருபோதும் தொழிலாளர் சட்டங்களை குறைப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது. ஆகவே மத்திய பாஜக அரசை கண்டித்து இந்த போராட்டங்கள் அறிவித்திருக்கிறோம். இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் முதலமைச்சருக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன், வருகின்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் இடைக்கால நிதிநிலை தாக்கல் செய்யும்பொழுது தொழிலாளர் சட்டங்களை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும், தமிழ்நாடு எப்பொழுதும் அவுட் ஆஃப் கண்ட்ரோல் என முதலமைச்சர் சொல்வார், அதை நிரூபிக்கும் வகையில் கலைஞர் கொண்டு வந்த தொழிலாளர் நலச் சட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்* மத்திய அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெறும்
கூட்டணிக்கு வந்தால் வரட்டும் வரவில்லை என்றால் போகட்டும் என்று ராஜகண்ணப்பன் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த செல்வப்பெருந்தகை, ராஜகண்ணப்பன் பேச்சையெல்லாம் ஏன் பொருட்படுத்துக்கிறீர்கள்? என்று ஒரே வரியில் பதிலடி கொடுத்தார்,
தேசிய தலைமையை மீறி பலரும் கூட்டணி பற்றி கருத்து தெரிவிப்பது குறித்த கேள்விக்கு, சாலையில் போராட்டக்களத்தில் இருக்கிறோம். இங்கும் கூட்டணியா… சத்தியமூர்த்தி பவனில் கூட்டணி பற்றி பேசுவோம். அனைத்துக் கட்சிகளும் மக்களுக்காக தான் போராடுகிறது அதன் பிறகு தான், கூட்டணி தேர்தல் என எல்லாம், என்றார்.
