தமிழக அரசியல் சூழல் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகின்றது. அண்மை காலமாகவே திமுக-காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற காங்கிரஸ் நிர்வாகிகளின் கோரிக்கை திமுக கூட்டணியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை வெளிப்படையாகவே முன்வைத்தார். செல்வப்பெருந்தகை, எம்.பி ஜோதிமணி, பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோரும் இதே கோரிக்கையை முன்வைத்து வந்தனர்.
இதற்கு திமுகவின் மூத்த அமைச்சரான திண்டுக்கல் ஐ.பெரியசாமி, ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி கட்சிகளின் உரிமை. ஆனால் பங்கும் இல்லை. கூட்டணி ஆட்சியும் இல்லை என்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக கருத்து தெரிவித்து இருந்தார்.
இருப்பினும், தவெகவின் ஆட்சியில் பங்கு அளிப்போம் என்ற வாக்குறுதி காரணமாக அக்கட்சியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் விரும்புவதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் விஜயின் தவெக பக்கம் செல்ல ஆவலாக இருக்கின்றனர். குறிப்பாக, ஜனநாயகன் பட சர்ச்சையில் ராகுல் காந்தி விஜய்க்கு அளித்த ஆதரவு மேலும் காங்கிரஸ் நிர்வாகிகளிடையே குஷியை ஏற்படுத்தியது.
நடிகரும் தவெக தலைவருமான விஜய்க்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, புதுச்சேரி, ஆந்திரா மாநிலங்களில் ஏராளமான ரசிகர்களின் வாக்குகள் உள்ளன. அங்கு நடைபெறும் தேர்தல்களில் விஜய் பிரச்சாரம் செய்தால் காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் உயர வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் கருதுகின்றனர்.
இந்தநிலையில், விஜய் யாருடன் கூட்டணி வைப்பார் என்பது குறித்து வரும் 23ம் தேதி தெரியும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், அதே ஜனவரி 23-ஆம் தேதிதான் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) தனது முழு வடிவத்தைப் பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அன்றைய தினம் தமிழக அரசியலில் ஒரு பெரிய திருப்புமுனை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
