சிறுவன் கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி ரூ.25,000 செலுத்தி முன்ஜாமின் பெற்றுக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் காளம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர், இன்ஸ்டாகிராம் மூலம் தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார்.
திருமணத்துக்கு விஜயஸ்ரீ பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து, பெண்ணை தேடி தனுஷ் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர் இல்லாததால், தனுஷின் சகோதரரை கடத்திச் சென்று, பின்னர் இரவு பேருந்து நிறுத்தம் ஒன்றில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக தனுஷின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே வி குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்த போலீசார், பெண்ணின் தந்தை உள்பட 5 பேர் கைது செய்தனர். இந்த நிலையில், தன்னை காவல் துறையினர் கைது செய்யக் கூடும் என கூறி, முன் ஜாமீன் கோரி, ஜெகன் மூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கு நீதிபதி வேல்முருகனிடம் இருந்து நீதிபதி ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது மனுவை அவர் தள்ளுபடி செய்தார். இதையடுத்து ஜெகன்மூர்த்தி மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடினார்.
நீதிபதி மனோஜ் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. ரூ. 25,000 பிணைத்தொகை கட்டி வழக்கமான ஜாமினை பெறவேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன்மூலம் கைதாவதில் இருந்து ஜெகன்மூர்த்தி தப்பியுள்ளார்.
