வரதட்சணை கொடுமையால் ப்ரீத்தி என்ற இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், அந்தபெண்ணின் கணவர், மாமியார் கைது செய்யப்பட்டதாக உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து
ப்ரீத்தியின் உடல் தகனம் செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்டது.
திருப்பூர் பிரண்ட்ஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்த சுகந்தி என்பவரது மகள் பிரீத்தி என்பவரை ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் பகுதியை சேர்ந்த சதீஷ்வர் என்பவருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி திருமணம் செய்து கொடுத்துள்ளனர். திருமணத்தின் போது 120நகை, 25 லட்சம் பணம், 38 லட்சம் இன்னோவா கார் உள்ளிவற்றை கொடுத்த நிலையில் பெண்ணின் பூர்வீக சொத்து விற்பனை வகையில் 50 லட்சம் பணம் வருவதை அறிந்து அதனை கேட்டு கொடுமை படுத்திய நிலையில் 10 மாதத்தில் வரதட்சணை கொடுமை காரணமாக கணவர் வீட்டில் இருந்து வெளியேறி தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.
ஒரு மாதமாக மன உளைச்சலில் இருந்த பிரீத்தி தாயார் வெளியே சென்ற போது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மீட்ட நல்லூர் போலீசார் உடற்கூறாய்வு சோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத்தார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரனை முற்றுகையிட்ட பெண்ணின் உறவினர்கள், பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பிரேதத்தை பெற்றுக் கொள்வோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வரதட்சணை கொடுமைக்கு காரணமாக இருந்த, ப்ரீத்தியின் கணவர் சதீஸ்வர், மாமனார் விஜயகுமார், மாமியார் உமா ஆகியோரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் நல்லூர் போலீசார் மூன்று பேரையும் இன்று கைது செய்தனர். தொடர்ந்து இது குறித்து ஆர்டிஓ விசாரணை நடத்தப்படும். வரதட்சணை கொடுமை வழக்கில் மூன்று பேரும் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ப்ரீத்தியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று உடலை பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து ப்ரீத்தியின் உறவினர்கள் உடலைப் பெற்றுக்கொண்டு பிரண்ட்ஸ் கார்டன் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்து சென்று அங்கு வைத்து இறுதி சடங்குகள் செய்தனர். அப்போது அவரது உறவினர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. தொடர்ந்து ப்ரீத்தியின் உடல் திருப்பூர் மின் மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.