அந்தமான் நிகோபார் தீவுகளின் இந்திரா பாயிண்ட்டிலிருந்து தென்கிழக்கே.52 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடல் அலையின் சீற்றத்தினால் அமெரிக்காவின் பாய் மரக்கப்பல் ஒன்று நேற்று பழுதடைந்தது. இது குறித்து போர்ட் பிளேரில் உள்ள தேசிய கடல் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு தகவல் அனுப்பப்பட்டது. அதன்பேரில், இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் ஐ.சி.ஜி.எஸ்., மீட்பு கப்பலின் உதவியுடன் அமெரிக்க கப்பலையும், அதில் பயணித்த 2 பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
பலத்த காற்று மற்றும் தொழில்நுட்ப பிரச்னைகள் இருந்தபோதும், அந்தக் கப்பலை இந்திய கடலோர பாதுகாப்பு படையினர், வெற்றிகரமாக கேம்ப்பெல் பே துறைமுகத்திற்கு இன்று இழுத்து வந்தனர். நடுக்கடலில் சிக்கிய அமெரிக்க கப்பலை 48 மணி நேரத்திற்குள் மீட்ட இந்திய கடலோர பாதுகாப்பு படையினரின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
