தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை படகுடன் சிறைபிடித்துள்ளனர்.
தமிழக மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் அத்துமீறி கைது செய்யும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளை பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், பாபன் தெற்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 பேர் உட்பட 14 தமிழக மீனவர்களை படகுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்தது. கற்பிட்டி கடற்பரப்பில் வைத்து எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் புத்தளம் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். இருப்பினும் இலங்கை கடற்படையின் இந்த தொடர் அட்டூழியத்தை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.