“காந்தி கண்ணாடி” படத்தில் பிரதமர் மோடி குறித்து இழிவான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக கேபிஒய் பாலா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் கேபிஒய் பாலா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பாலாஜி சக்திவேல், அர்ச்சனா உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் “காந்தி கண்ணாடி”. சமீபத்தில் வெளியானது. இந்த படத்தை செரீப் இயக்கி இருந்தார். படத்திற்கு கலவையான விமர்சனம் எழுந்துள்ள நிலையில் படத்திற்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சிவசேனா கட்சி (தமிழ்நாடு) மாநில அமைப்பாளர் வேணுகோபால்ஜி என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், “காந்தி கண்ணாடி” திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள காட்சியிலும், வசனத்திலும், பாடல்களிலும் பிரதமர் மோடி குறித்து இழிவுப்படுத்துவதாக உள்ளது. திரைப்படத்தின் இயக்குநர், பிரதமரை இழிவுப்படுத்தும் வகையில் காட்சிகளை அமைத்துள்ளார்.
இது மக்களை குழப்பத்தில் தள்ளும் செயல். ஜிஎஸ்டி வரி விகிதத்தில் மாற்றம் செய்து பொருளாதார மேம்பாட்டிற்கு பிரதமர் மோடி வழிவகுத்துள்ளார். ஆனால் இது போன்ற திரைப்படங்கள் மூலம் மக்களின் மன நிலையை மாற்றும் செயலை செய்வது கண்டிக்கத்தக்கது. எனவே இந்த படத்தில் நடித்த கேபிஒய் பாலா, பாலாஜி சக்திவேல், இயக்குனர் ஷெரீப் உள்ளிட்டோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சர்ச்சைக்குரிய காட்சிகள், பாடல் வரிகள் ஆகியவற்றை நீக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.