மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் மாநிலங்களவையில் சமர்ப்பித்த புதிய தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டில் தமிழ்நாடு, நாட்டின் சாலை விபத்துகள் எண்ணிக்கையில் முதலிடத்தையும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. .
2024ஆம் ஆண்டில், தமிழ்நாடு மொத்தம் 67,526 சாலை விபத்துகளைப் பதிவு செய்துள்ளது. இது, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைவிட மிக அதிகமாகும். கடந்த 2023ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 67,213 விபத்துகளுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. 2020ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை தொடர்ந்து மேல்நோக்கிய போக்கைக் காட்டுவது கவலையளிக்கிறது.
உயிரிழப்புகளை பொறுத்தவரை, தமிழ்நாடு 2024இல் 18,449 உயிரிழப்புகளைப் பதிவு செய்துள்ளது. இது, 24,118 உயிரிழப்புகளைப் பதிவு செய்த உத்தரப்பிரதேசத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் உள்ளது. தேசிய அளவில், 2024இல் மொத்த சாலை விபத்துகள் 4.88 லட்சமாகவும், உயிரிழப்புகள் 1.77 லட்சமாகவும் அதிகரித்துள்ளன. இதில், நாட்டிலுள்ள மொத்த சாலை விபத்து அறிக்கைகளில் தமிழகத்தின் பங்கு மட்டும் சுமார் 14 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
சாலை விபத்துகளுக்கும் உயிரிழப்புகளுக்கும் தொடர்ந்து அதிவேகமே முக்கிய காரணமாக உள்ளது என்பதை இந்தத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. மாநிலத்தில் பதிவான மொத்த விபத்துகளில் (47,240 விபத்துகள்) மற்றும் உயிரிழப்புகளில் (12,240 உயிரிழப்புகள்) 70 சதவீதத்திற்கும் மேலாக அதிவேகத்தினால் ஏற்பட்ட விபத்துகளே பங்களித்துள்ளன.
பாதுகாப்புக் கருவிகளைக் கடைப்பிடிக்காததும் உயிரிழப்புகளுக்குப் பெரும் காரணமாகியுள்ளது. 2024இல், ஹெல்மெட் அணியாததால் 7,744 உயிரிழப்புகளும், சீட் பெல்ட் அணியாததால் 469 உயிரிழப்புகளும் தமிழகத்தில் பதிவாகியுள்ளன. சீட் பெல்ட் தொடர்பான உயிரிழப்புகள் குறைந்தாலும், ஹெல்மெட் தொடர்பான உயிரிழப்புகள் தொடர்ச்சியாக உயர்ந்து வருவது, இரு சக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பில் உள்ள இடைவெளிகளைப் பிரதிபலிக்கிறது.
சரியான ஓட்டுநர் உரிமம் இல்லாத ஓட்டுநர்கள் சம்பந்தப்பட்ட விபத்துகள் கீழ்நோக்கிய போக்கைக் காட்டியுள்ளன. 2024இல் 4,017 விபத்துகள் பதிவாகியுள்ளன. இது, 2023இல் 4,733 ஆகவும், 2020இல் 6,174 ஆகவும் இருந்தது. இது, அமலாக்கம் மற்றும் உரிமம் வழங்கும் நடைமுறைகளில் சில மேம்பாடுகள் இருப்பதை குறிக்கிறது.
மத்திய அரசு மோட்டார் வாகனச் சட்டம், 1988இன் கீழ் விதிகளை வகுத்தாலும், அவற்றை அமல்படுத்தும் பொறுப்பு மாநில அரசுகளிடம் உள்ளது. மோட்டார் வாகனத் திருத்தச் சட்டத்தின் கீழ் அபராதங்களை அதிகரித்தல் மற்றும் விபத்து அறிக்கைகளுக்காக e-DAR முறையை செயல்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
விபத்து குறித்த இந்த கவலைக்குரிய புள்ளி விவரங்களை உடனடியாகக் கவனத்தில் கொண்டு, மேலும் இதுபோன்ற விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைக் குறைக்க தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற பரவலான கருத்துக்கள் எழுந்துள்ளன.
