இந்திய அணியின் ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். 2007ஆம் ஆண்டு இந்திய அணி டி 20 உலகக் கோப்பையை வென்றபோது, அணியில் இடம்பெற்றிருந்த யுவராஜ் சிங், 2011-இல் ஒரு நாள் உலக கோப்பையை இந்தியா வென்றபோது தொடர் நாயகனாகவும் விளங்கினார்.
2019-ஆம் ஆண்டு ஓய்வு முடிவை அறிவித்த நிலையில், இவரது ஓய்வுக்கான காரணம் குறித்து அவ்வப்போது பல்வேறு சர்ச்சைகள் எழுவதுண்டு. தனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை அழித்தது எம்.எஸ்.தோனிதான் என யுவராஜின் தந்தை கூறியது சர்ச்சையாகவும் வெடித்தது.
இந்நிலையில், முன்னாள் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் யூடியூப் சானலில் பல்வேறு விஷயங்களை யுவராஜ் தற்போது பகிர்ந்துள்ளார். அதில், தனக்கு உரிய ஆதரவோ மரியாதையோ வழங்கப்படாததாக தான் உணர்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார். ஆர்வமே இல்லாமல் ஏன் தொடர்ந்து விளையாட வேண்டும் என கருதியே ஓய்வு முடிவை தான் அறிவித்ததாகவும் யுவராஜ் சிங் மனம் திறந்துள்ளார்.
எனது கேரியரின் இறுதிக்கட்டத்தில் தகுந்த மரியாதையும், ஆதரவும் தனக்கு கிடைக்கவில்லை என்பதால், எனக்கு மரியாதை கிடைக்காதபோது, நான் ஏன் இதைத் தொடர்ந்து செய்ய வேண்டும்? என்ற எண்ணம் தோன்றியதால் ஓய்வை அறிவித்ததாகவும் யுவராஜ் அந்த நேர்காணலில் தெரிவித்தார்.
மேலும், நான் ஏன் விளையாடுகிறேன்? யாரிடம் என்ன நிரூபிக்க வேண்டும்? இதற்கு மேல் என்னால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் எதையும் செய்ய முடியாது என்ற எண்ணமும் அந்த முடிவுக்கு காரணமாக அமைந்ததாகவும் யுவராஜ் கூறியிருக்கிறார்.
