தமிழக வெற்றிக் கழகம் மூன்று ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கட்சி தொடங்கியதிலிருந்து அக்கட்சிக்குள்ளும் வெளியிலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த முக்கிய நகர்வுகளை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

உற்சாகம் கொடுத்த முதல் ஆண்டு: தமிழக மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும்; ஒரு மாற்றத்தை கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் பிப்ரவரி 02, 2024 அன்று தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார் விஜய். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ எனும் சமத்துவ கொள்கையோடு, 2026 சட்டமன்ற தேர்தலே இலக்கு என்ற குரலோடே கட்சியை தொடங்கினார். கட்சியின் அடுத்த முக்கிய நகர்வாக மார்ச் 08, 2024 அன்று கட்சியில் உறுப்பினர்களை சேர்ப்பதற்கான செயலியை அறிமுகம் செய்து வைத்தார். அச்செயலியின் மூலம் வெகு விரைவாக லட்சக்கணக்கான உறுப்பினர்கள் ‘தவெக’வில் இணைந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்கி வருகிறது. அச்சூழலில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் பங்கேற்கவில்லை. யாருக்கும் ஆதரவும் அளிக்கவில்லை. அதன் பிறகு கட்சியின் அடிப்படை கட்டமைப்பு தொடர்பான பணிகள் நடந்துவந்த நிலையில், ஆகஸ்ட் 22, 2024 அன்று கட்சியின் கொடி மற்றும் கொடிப்பாடலை அறிமுகம் செய்து வைத்தார். அதையடுத்து நடந்த முக்கிய நிகழ்வு தமிழக வெற்றிக்கழகத்தின் முதலாம் மாநில மாநாடு.
கட்சி தொடங்கி சுமார் 9 மாதங்கள் கழித்து விக்கிரவாண்டி, வி.சாலை பகுதியில் அக்டோபர் 27 ஆம் தேதி நடந்த கட்சியின் முதல் மாநில மாநாட்டில் கட்சியின் கொள்கை, கொள்கை தலைவர்கள், கொள்கை எதிரி, அரசியல் எதிரி என்பதையெல்லாம் அறிவித்தார். அதன் பிறகே தமிழக அரசியலில் தவெக பயணிக்கும் பாதை அனைவருக்கும் தெரிய வந்தது. அம்மாநாட்டில் விஜய் அறிவித்த, “ஆட்சி அதிகாரத்தில் பங்கு” என்ற அறிவிப்பு 2026 தேர்தலுக்கான பயணத்தில் முக்கிய நகர்வாக அமைந்தது. அந்த முழக்கம் பிற கூட்டணிகளுக்குள்ளும் தாக்கத்தை ஏற்படுத்தி, அதே கூக்குரலை எழுப்ப வைத்துள்ளது.

அதன் பின்னர், ஃபெஞ்சல் புயலுக்கு நிவாரணம், பரந்தூர் போராட்டக்காரர்களை நேரில் சந்தித்துப் பேசுவது, வேங்கைவயலுக்கு செல்லத் திட்டமிடுவது போன்ற அரசியல் பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வந்தார். தலைவர்களின் பிறந்த நாள், நினைவு தினத்தின்போது கட்சி அலுவலகத்திலேயே அவர்களின் திருவுருவப் படங்களுக்கு மரியாதை செய்வது போன்றவை தொடர்ச்சியாக நடைபெறுகிறது.

அதன் பின்னர், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் அழைத்து நிவாரணம் வழங்கியது. அந்நிகழ்வு சற்றே விமர்சனத்திற்கு உள்ளானது. அதையடுத்த அவரது நேரடியான முதல் மக்கள் சந்திப்பு என்பது பரந்தூர் போராட்டக்காரர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆதரவாக தோள் கொடுப்பதாய் பேசியது. அதை தொடர்ந்து மதுரை டங்ஸ்டன் விவகாரத்தில் போராடும் மக்களை சந்திப்பது, வேங்கைவயலுக்கு செல்லத் திட்டமிடுவது போன்ற திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஆனால், செயல்படுத்தப்படவில்லை. அதுபோக, இடையிடையே தமிழகத்தில் நடக்கும் குற்ற சம்பவங்கள் தொடர்பாகவும், பாலியல் குற்றங்கள், மக்கள் போராட்டங்கள் உள்ளிட்டவற்றில் தேர்வு செய்து தனது கருத்தையும் கண்டனத்தையும் சொல்லி வந்திருக்கிறார். மேற்கூறிய பரந்தூர் மக்கள் சந்திப்பு என்ற முக்கிய நிகழ்வோடு சில நாட்களில் முடிந்தது தமிழக வெற்றிக்கழகத்தில் ஒரு வருடம்.

அரசியல் பாடமெடுத்த இரண்டாம் ஆண்டு: தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவர்களின் மார்பளவு சிலைகளை பனையூர் அலுவலகத்தில் திறந்து வைத்து கட்சித்தலைவராக இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்தார் விஜய். முதல் வருடத்தில் கற்ற படிப்பினைகள் கொண்டு 2025 ஆன இரண்டாம் ஆண்டில் நுழைந்த தமிழக வெற்றிக்கழகத்தில் இருந்த முக்கிய பிரச்சனை முழுமை அடையாத கட்சிக்கட்டமைப்பு. கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளையும் மே மாத இறுதிக்குள் முடிக்க விஜய் அழுத்தம் கொடுக்க பொது செயலாளர் ஆனந்த் தலைமையில் அதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டன.

கட்சி கட்டமைப்பு பணிகள் ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோரின் இணைவிலிருந்து விரிவடைய தொடங்கியது. அச்சமயம் தொட்டு இரண்டாம் ஆண்டின் பிற்பகுதியில் இணைந்த செங்கோட்டையன் வரை முக்கியப்பதவிகள் கொடுத்ததில் ‘விஜய் மக்கள் இயக்க’ நிர்வாகிகளுக்கு ஒரு அதிருப்தி நிலவியதும் அரசால் புரசலாக பேசப்பட்ட தகவல். ஏகப்பட்ட குழப்பங்கள், மெனக்கெடல்களுக்கு பின் படிப்படியாக மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதிலும் சில இடங்கள் பாக்கி. பதவிக்கு பணம் வாங்கப்படுவதாக பெரும் சர்ச்சையும் கட்சிக்குள் நிலவியது. இவை அத்தனையும் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க மறுபுறம் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசளிப்பது, அவ்வப்போது ஏதாவது ஒரு மண்டபத்தில் நிர்வாகிகளை சந்தித்து உரையாற்றுவது என்றிருந்தார் விஜய். இரண்டாவது ஆண்டின் முதல் 5, 6 மாதங்கள் இப்படியே போக அதன்பின்பு விஜய்யின் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்திற்கான திட்டங்கள் வரையறுக்கப்பட்டன.

விஜய்யின் மக்கள் சந்திப்பு பயணம் ஜூனில் தொடங்கும், ஜுலையில் தொடங்கும் என்றெல்லாம் சொல்லப்பட்ட நிலையில் அது செப்டம்பருக்கு தள்ளிப்போனது. அதற்கு முன்பாக ஆகஸ்டில் மதுரையில் ஆகஸ்ட் 21, 2025 அன்று நடந்த 2-வது மாநில மாநாடு தமிழக வெற்றிக்கழகத்தினருக்கு ஒரு புத்துணர்ச்சியை தந்தது. அம்மாநாட்டில் நடந்த ஒரு முக்கிய நகர்வாக, ‘அதிமுகவை சற்றே கடுமையாக சாடி பேசியிருந்தார்’ விஜய். முதல் மாநில மாநாட்டில் அதிமுகவை பற்றி ஒரு வார்த்தை கூட விஜய் பேசாததை வைத்து அதிமுகவுடன் கூட்டணி போவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பேசப்பட்ட நிலையில், அதற்கான முயற்சிகள் கைகூடவில்லை போல என்ற பதிலை தந்தது விஜய்யின் அந்த பேச்சு. ஆம், அதற்கு முன்பாகவே ஏப்ரல் மாதத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துவிட்டிருந்தது அதிமுக. அதையடுத்து தான் திமுகவையும் தாக்க தொடங்கியது தவெக. அம்மாநாடு கொடுத்த உற்சாகத்தோடு தங்களது தலைவரின் சுற்றுப்பயணத்திற்கான பணிகளை பார்த்தனர் தமிழக வெற்றிக்கழகத்தினர்.

செப்டம்பர் 13, 2025 சனிக்கிழமை அன்று திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்கிய விஜய் தொண்டர்களும் மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஆவேசமாக பேசினார். சில இடங்களில் ஜெயலலிதா அவர்களின் பாணி தென்பட்டது கவனிக்கப்பட்டது. அன்றே அரியலூர், பெரம்பலூர் பகுதிகளில் பேசவிருந்த நிலையில் அரியலூரில் பேசிவிட்டு நேரப்பிரச்சனை காரணமாக பெரம்பலூரில் பேசாமல் சென்றார். அது அப்பகுதியில் அவருக்காக காத்திருந்த மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அதற்காக அடுத்த சனிக்கிழமை நாகையில் நடந்த பிரச்சாரத்தின் போது மன்னிப்பு கோரினார். நாகையை தொடர்ந்து அதே நாளில் திருவாரூரில் மக்கள் சந்திப்பையும் நிறைவு செய்தார். பெரிய அசம்பாவிதங்கள் இன்றி இதுவரை எல்லாம் நல்லபடியாக போக, செப்டம்பர் 27 ஆம் தேதி தான் விஜய்க்கு பெரிய கண்டம் காத்திருந்தது.

பயண திட்டத்தின் படி செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று சேலம் பகுதியில் பிரச்சாரம் செய்வதாக இருந்த நிலையில் திடீரென நாமக்கல் மற்றும் கரூர் என மாற்றப்பட்டது. இருந்த குறைவான காலத்தில் அதற்கான ஏற்பாடுகளும் அந்தந்த பகுதிகளில் செய்யப்பட்டன. எப்போதும் போல நாமக்கல்லுக்கும் விஜய் வந்து சேர கால தாமதம் ஆனது. நாமக்கல்லில் இருக்க வேண்டிய நேரத்தில் தான் அவர் சென்னையிலிருந்து கிளம்பினார். தாமதத்தை தொடர்ந்து மதிய வேளையில் நாமக்கல்லுக்கு வந்து சேர்ந்த விஜய், அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மற்றும் மக்களிடையே வழக்கம்போல் உரையாற்றினார். அங்கேயே ஓரிரு இடங்களில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. நாமக்கல்லை முடித்துவிட்டு கரூருக்கு இரவு வந்து சேர்ந்த விஜய்யை பின்தொடர்ந்து வந்த கூட்டத்தால் கரூர்- வேலுசாமிபுரத்தில் கூட்டம் அதிகமாகி நெரிசல் ஏற்பட்டு அதில் அக்கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இத்தகவல் தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுக்க தீயாய் பரவியது. ஒருபக்கம் திமுக அமைச்சர்கள் சம்பவ இடங்களுக்கு விரைய தவெக தலைவர் விஜய்யோ அன்று இரவே சென்னை புறப்பட்டு சென்றார். செய்தியாளர் சந்திப்பில் கூட ஒரு வருத்தம் தெரிவிக்காமல் சென்றது மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. அதையடுத்து 2 நாட்கள் கழித்தே அது தொடர்பாக வீடியோ வெளியிட்டார் விஜய். அதிலும் ஒரு தார்மீகப்பொறுப்பை கூட ஏற்காமல், முதல்வருக்கு எதிராகவே பேசியிருந்தார். அதையடுத்து ஒருமாத காலத்திற்கு ஒட்டுமொத்த தவெகவினரும் SILENT MODE-க்கு போய்விட்டனர்.

அடுத்த முப்பதாவது நாளான அக்டோபர் 27 அன்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை மகாபலிபுரத்திற்கு நேரில் அழைத்து வர செய்து அவர்களுக்கு தனிமையில் இரங்கலையும் ஆறுதலையும் கூறினார். அச்சந்திப்பின் போது உயிரிழந்தோரிக் குடும்பத்தாரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் என்ற தகவலை நேரில் சந்தித்துவிட்டு வந்த சிலர் ஊடகங்களில் தெரிவித்தனர். அக்குடும்பத்தாருக்கு நிவாரணமாக ரூ.20 லட்சம் வங்கிக்கணக்கில் கட்சியின் சார்பில் வழங்கப்பட்டது. அதில் ஒருவர் மட்டும் அப்பணத்தை திருப்பி அனுப்பினார். “எங்களுக்கு தேவை உங்களின் நேரில் வந்து நீங்கள் தரும் ஆறுதல் மட்டுமே; பணம் அல்ல” என்று அப்பெண் கூறியிருந்தார். தமிழக வெற்றிக்கழகத்தை புரட்டிப்போட்ட கரூர் சம்பவத்திற்கு ஆளும் திமுக அரசே காரணம் என குற்றம் சாட்டியது தவெக. ஒருபுறம் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் குஸ்த்துவை அமைத்து விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டு, அக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், மறுபுறம் இது தொடர்பான வழக்கின் விசாரணையில் முடிவாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு அருணா ஜெகதீசன் குழுவை கலைத்தது உச்சநீதிமன்றம். தவெகவினர் அதனை கொண்டாடினர்.

தொடர்ந்து கரூரில் விசாரணையை தொடங்கிய சிபிஐ, ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டது. அதையடுத்து கடந்த ஜனவரி 12 மற்றும் 19 ஆம் தேதிகளில் டெல்லி தலைமை அலுவலகத்தில் விஜய்யிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து வருகிற பிப்ரவரியில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றப்பத்திரிகையில் குற்றவாளிகள் என்ற வரிசையில் விஜய்யின் பெயர் இடம்பெறுமா? என்ற கேள்வி எழுந்து வருகிறது. இதற்கிடையில் நவம்பரில் செயற்குழு பொதுக்குழு, இடையிடையே நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் உள்ளிட்ட நகர்வுகள் நடக்க; மாவட்ட செயலாளர் நியமனம், மாற்றுக்கட்சியிலிருந்து சில முக்கியப்புள்ளிகள் இணையும் விழா போன்றவை நடந்தன. இதில் மாவட்ட செயலாளர் நியமனத்தில் போது தூத்துக்குடியை சேர்ந்த நிர்வாகியான அஜிதா ஆக்னஸ் விஜய்யிடம் நியாயம் கேட்க போராடியது, விஜய் அவரை சந்திக்காமல் ஒதுக்கியது. அவர் கேட்ட மாவட்ட செயலாளர் பொறுப்பிற்கு வேறொருவர் நியமிக்கப்பட்டது; அதையடுத்து அவர் மனமுடைந்து விஷம் குடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது எல்லாம் பெரும் சர்ச்த்க்காய்களை கிளப்பின. கிட்டத்தட்ட அஜிதா மருத்துவமனையில் இருந்த சமயத்தில் ஜனநாயகம் ஆடியோ லான்ச்சில் விஜய் பங்கேற்றது, நடனமாடியது உள்ளிட்டவையும் விமர்சனத்திற்கு உள்ளாகின.

கட்சியில் இணைந்த செங்கோட்டையன் இணைவு, முக்கியமாக பார்க்கப்பட்டது. அவரின் அனுபவம் தமிழக வெற்றிக்கழகத்திற்கு கைகொடுக்குமா? என்ற கேள்விக்கு விடையாக ஈரோடு மக்கள் சந்திப்பை டிசம்பரில் வெற்றிகரமாக நடத்தி காட்டினார் செங்கோட்டையன். அவரை தொடர்ந்து வேறு சில முக்கிய புள்ளிகளும் கட்சியில் இணைந்து வருகின்றனர். கட்சி ரீதியாக சிபிஐ விசாரணை ஒருபுறம் தமிழக வெற்றிக்கழகத்திற்கு நெருக்கடியாக மாறி நிற்க, ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கொடுக்காமல் இன்றுவரை தணிக்கை வாரியம் கொடுக்கும் இடைஞ்சல்கள் விஜய்யையும் அவரை நம்பி பணம்போட்டு படமெடுத்த தயாரிப்பு நிறுவனத்தையும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளன.

படத்திற்கான வழக்கு மீண்டும் முதலிலிருந்து விசாரிக்கப்பட உள்ள நிலையில் தேர்தலுக்கு முன்பாக படம் மக்களுக்கு போய் சேர்ந்து விடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இத்தகைய இடைஞ்சல்களால் சற்றே சுணங்கி போயிருந்த தமிழக வெற்றிக்கழகத்தை மீடனும் சற்றே உற்சாகப்படுத்தியது ‘விசில்’ சின்னம். சின்னம் கிடைத்த அன்றே பட்டிதொட்டி எங்கும் பரவியது. பல வீட்டு சுவர்களில் வரையப்பட்டது ஆச்சர்யமிக்க ஒன்று தான்.
முதலாம் ஆண்டை ஓரளவு ‘பாசிட்டி வைப்’போடு மட்டுமே நிறைவு செய்த தமிழக வெற்றி கழகத்தினர் இரண்டாம் ஆண்டை கொஞ்சம் பாசிட்டிவ், கொஞ்சம் நெகட்டிவ், மீதத்துக்கு தேர்தல் டென்க்ஷனில் நிறைவு செய்யவிருக்கின்றனர். அடுத்து அடியெடுத்து வைக்கும் 3-வது ஆண்டு தமிழக வெற்றிக்கழகத்திற்கு முக்கியமான ஆண்டு. குறிக்கோளாக கொண்ட சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவார்களா? அதற்கான கடைசி நேர ஆயத்த பணிகளாக என்ன செய்யப்போகின்றனர்? ஆட்சியில் பங்கு என அறிவித்த பின்பும் கூட்டணி அமையாததை சமாளித்து எப்படி வெல்லப்போகின்றனர்? விஜய் அவர்களின் அடுத்தகட்ட நகர்வு என்ன? ஜனநாயகன் படம் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக வருமா? வராதா? போன்ற பல்வேறு கேள்விகளுக்கான பதில் கிடைக்கும் ஆண்டாக தமிழக வெற்றிக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு இருக்கப்போகிறது.

இக்கட்டுரையின் முடிவாக சொல்ல நினைப்பது, விஜய்க்கும் அவரது கட்சிக்கும் எத்தனையோ பிரச்சனைகள் வந்தாலும், விஜய் வெளியேவே வராவிட்டாலும், அவருக்கு இருக்கும் அரசியல் புரிதல் இருக்கிறதா? இல்லையா? என்பது பற்றி மக்களுக்கு தெரியாவிட்டாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் அவரை ‘ஒரு நம்பிக்கை ஒளி’யாக பார்க்கிறது தமிழ்நாட்டு மக்களில் ஒரு பெரும் கூட்டம். விஜய் அந்த நம்பிக்கையை காப்பாற்றுவாரா? அல்லது நம்பிக்கை துரோகம் செய்வாரா? என்பது இந்த ஆண்டில் தெரிந்து விடும். இன்னும் சுருக்கமாக சொல்லப்போனால் தமிழக வெற்றிக்கழகம் மென்மேலும் வளருமா? இல்லையேல் கரைந்து காணாமல் போகுமா? என்பது தமிழக வெற்றிக்கழகம் இனிதாய் அடியெடுத்து வைக்கும் இந்த மூன்றாம் ஆண்டில் தெரிந்து விடும்.
