சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தேமுதிக சார்பில் நாளை (பிப். 6) முதல் விருப்பமனு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கட்சிகள் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்ப மனுக்களை விநியோகித்து நேர்காணல் நடத்தி வருகின்றன. ஏற்கனவே, அதிமுக விருப்பமனு விநியோகத்தை முடித்துவிட்டது. இதேபோல், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் விருப்ப மனு விநியோகத்தை 6-ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், விஜயகாந்த் இல்லாமல் முதல்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் தேமுதிக, இதுவரை கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருகிறது. இந்தநிலையில், தேமுதிக சார்பில் நாளை (பிப். 6) முதல் விருப்பமனு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரி 30 சட்டமன்ற தொகுதியிலும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் சட்டமன்ற பொதுத்தேர்தல் விருப்ப மனுக்களை 06.02.2026 முதல் 12.02.2026 வரை காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை சென்னை கோயம்பேட்டில் உள்ள (கேப்டன் ஆலயம்) தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை 12.02.2026 வியாழக்கிழமை மாலை 5 மணிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழக சட்டமன்ற பொதுத் தொகுதிக்கான விருப்பமனு கட்டணமாக ரூ.15 ஆயிரமும், தனித்தொகுதிக்கான விருப்பமனு கட்டணமாக ரூ.10 ஆயிரமும் புதுச்சேரி சட்டமன்ற பொதுத் தொகுதிக்கான விருப்பமனு கட்டணமாக ரூ.10 ஆயிரமும் தனித்தொகுதிக்கான விருப்பமனு கட்டணமாக ரூ.5 ஆயிரமும் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
