மக்களவையில் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளிக்கத் திட்டமிட்டிருந்த போது சில காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதமரின் இருக்கையை சூழ்ந்து கொண்டு முன்னெப்போதும் இல்லாத அசம்பாவிதத்தை செய்யத் திட்டமிட்டிருந்ததாக தமக்குத் தகவல் கிடைத்ததாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட பாதுகாப்புக் கவலைகள் மற்றும் அவையின் கண்ணியத்தைக் கருத்தில் கொண்டு, பிரதமரை சபைக்கு வரவேண்டாம் என்று தாமே அறிவுறுத்தியதாக சபாநாயகர் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த பிரியங்கா காந்தி,
”பிரதமர் சபாநாயகருக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறார். மூன்று பெண்கள் இருக்கைக்கு முன்னால் நின்றதால், அவைக்கு வர அவருக்குத் துணிச்சல் இல்லையா? இது என்ன முட்டாள்தனம்? இங்கு எந்த விவாதமும் நடக்கவில்லை. காரணம் எந்த பிரச்னைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக இல்லை” என குற்றம் சாட்டியுள்ளார்.
