தேர்தலில் சீட் இல்லை என்ற தலைமையின் முடிவால் தவெகவில் இருந்து சில மாவட்ட செயலாளர்கள் விலக திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் த.வெ.க. தலைவர் விஜய் பல்வேறு வியூகங்களை அமைத்து பணியாற்றி வருகிறார். கட்சியில் உறுப்பினர் சேர்க்கை ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும், மறுபக்கம் மக்கள் சந்திப்பு, அரசியல் நகர்வுகளில் விஜயும், கட்சியின் மாநில நிர்வாகிகளும் தீவிரமாக செயலாற்றுகின்றனர்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பிறகு, இடையில் சுற்றுப்பயணத்தில் தொய்வு ஏற்பட்டது. அதனையடுத்து காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார். அதனைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் அதேபோல் சமீபத்தில் நிகழ்ச்சி நடந்தது. தேர்தல் நெருங்கிவரும் சூழலில், கட்சியை வலுப்படுத்தும் நோக்கிலும், தேர்தல் களப் பணிகளை சீரிய முறையில் முன்னெடுக்கும் வகையில் கட்சி ரீதியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, 234 தொகுதிகளில் 69 ஆயிரம் பூத் கமிட்டிகள் நியமிக்கப்பட்டு, அவர்களும் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து த.வெ.க.வுக்கு ஆதரவு திரட்டுகிறார்கள். மேலும் தேர்தல், கட்சி தொடர்பான பணிகளை முடுக்கிவிடும் விதமாக முக்கிய நிர்வாகிகள் கூடி ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை அவ்வப்போது செய்கின்றனர்.
தேர்தலில் போட்டியிட விருப்பமனுக்கள் பெறப்பட்டு வரும் நிலையில், கடந்த 10ம் தேதி மாவட்ட செயலாளர்களுடன் விஜய் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அந்த கூட்டத்தில் பேசிய புஸ்ஸி ஆனந்த், சில மாவட்டங்களின் பெயர்களை குறிப்பிட்டு அங்கு சீட்டு இல்லை என்றால் தளபதியின் வெற்றிக்காக உழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது பலரையும் அப்செட் ஆக்கியதோடு, விலகல் முடிவுக்கு தள்ளியதாக கூறப்படுகிறது. எனவே, தேர்தலில் போட்டியிட சீட் இல்லை என்ற தலைமையின் முடிவால் தவெகவில் இருந்து சில மாவட்ட செயலர்களும் விலக திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
