ஏலியன்ஸ் பற்றிய ரகசிய தகவல்களை பராக் ஒபாமா கசியவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்குமாறு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மீது ஒரு பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஏலியன்கள் (வேற்று கிரக வாசிகள்) தொடர்பான ரகசியத் தகவல்களை ஒபாமா கசியவிட்டுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். இது அடையாளம் தெரியாத வான்வழி நிகழ்வுகள் (UAP) மற்றும் பறக்கும் தட்டுகள் (UFO) குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.
அதிபர் பதவியில் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் ரகசிய உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் ஒபாமா இந்தக் கருத்துக்களைத் தெரிவித்திருந்தால், அது நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான மிக முக்கியமான தகவல்களை வெளியிடுவதற்குச் சமம் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்கள் – ஒபாமா: டிரம்ப் கூறியதாவது,“இந்தக் குற்றச்சாட்டுகளை ஆதரிக்க அவர் (ஒபாமா) எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. ரகசியத் தகவல்களிலிருந்து இதைப் பகிர்ந்துள்ளார். அவர் இதைச் செய்திருக்கக் கூடாது. ஒபாமா ஒரு மிகப்பெரிய தவறைச் செய்துவிட்டார்,” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
சமீபத்தில் போட்காஸ்டர் (Podcaster) பிரையன் டைலர் கோஹன் உடனான நேர்காணலில், “ஏலியன்கள் உண்மையில் இருக்கிறார்களா?” என்று ஒபாமாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “அவர்கள் இருக்கிறார்கள், ஆனால் நான் அவர்களைப் பார்த்ததில்லை, மேலும் அவர்கள் ‘ஏரியா 51’-ல் (Area 51) வைக்கப்படவில்லை,” என்று பதிலளித்தார்.
ஒபாமாவின் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய பிறகு, அவர் ஒரு விளக்கத்தை அளித்துள்ளார். இந்தக் கருத்துக்கள் நேர்காணலின் மிக வேகமான கேள்வி-பதில் (speed-round) பகுதியின் போது தெரிவிக்கப்பட்டவை என்று அவர் தெளிவுபடுத்தினார். பிரபஞ்சத்தின் வேறு எங்காவது உயிர்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம், ஆனால் தனது அதிபர் பதவிக்காலத்தில் அதற்கான எந்த ஆதாரத்தையும் தான் பார்த்ததில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஒபாமாவின் அறிக்கைக்கு டிரம்ப் பதில்: “ஏலியன்கள், அடையாளம் தெரியாத வான்வழி நிகழ்வுகள் (UAP) மற்றும் பறக்கும் தட்டுகள் (UFO) தொடர்பான அரசு கோப்புகளை அடையாளம் கண்டு வெளியிடும் செயல்முறையைத் தொடங்குமாறு சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் முகமைகளுக்கு நான் உத்தரவிடுவேன். மேலும், இந்த மிகவும் சிக்கலான மற்றும் புதிரான விஷயங்கள் தொடர்பான மற்ற அனைத்து தகவல்களையும் பகிர்ந்து கொள்ள அறிவுறுத்துவேன் என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஏலியன்கள் தொடர்பான மர்ம முடிச்சுகள் வெளிவருமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
