தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித்துறையின் பாடத்திட்டங்களை பின்பற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு முழுவதும் 7,545 பள்ளிகளில் இருந்து சுமார் 7லட்சத்து 99 ஆயிரத்து 692 மாணவ-மாணவிகள் இத்தேர்வை எழுதவுள்ளனர். இது தவிர தனித் தேர்வர்களாக 27,783 பேர் தேர்வெழுதுகின்றனர். இந்த நிலையில், பொதுத்தேர்வை எழுதும் மாணவர்கள் அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அதன்படி,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்து செய்தியில், பதற்றமின்றித் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெறுங்கள் என தெரிவித்துள்ளார்.
உங்களின் உழைப்பை சரியாக அறுவடை செய்ய வேண்டிய நேரம் இது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நாளைய வளமான சமுதாயத்தை உருவாக்க உள்ள நீங்கள் அனைவரும் இந்தத் தேர்வினைப் பதற்றமின்றி, அச்சமின்றி, துணிவுடன் எதிர்கொள்ளுங்கள் என தவெக தலைவர் விஜய்யும்,
எந்தவித பயமும் இல்லாமல், தைரியமாக பொதுத் தேர்வை எழுதுங்கள் என வி.கே.சசிகலாவும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நம்பிக்கையுடன் தேர்வுகளை எழுதி, நல்ல மதிப்பெண்கள் பெற்று, உங்கள் பெற்றோரையும், ஆசிரியப் பெருமக்களையும் பெருமைப்படுத்த வாழ்த்துக்கள் என அண்ணாமலையும்,
தேர்வினை நீங்கள் அனைவரும் துணிவுடனும், மிகுந்த உற்சாகத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும்,
அன்பு மாணவர்களே பதற்றம் இல்லாமல் சந்தோஷமா Exam Hall-க்கு வாங்க என அன்புமணியும்,
தன்னம்பிக்கையுடன், மனஅமைதியுடன் தேர்வுகளை எதிர்கொண்டு, திறமையை முழுமையாக வெளிப்படுத்துங்கள் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
