ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், குவைத் வான்பரப்பில் அமெரிக்காவின்F-15E ஸ்ட்ரைக் போர் விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த போர் விமானம் குவைத்தின் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது. விமானத்தின் சிதறிய பாகங்கள் குவைத்தில் உள்ள ‘மினா அல் அஹ்மதி’ (Mina Al Ahmadi) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையப் பகுதியில் விழுந்தன. இதில் அங்கிருந்த தொழிலாளர்கள் இருவர் காயமடைந்ததாகத் தெரிகிறது.
ஈரானின் அரசுச் செய்தி நிறுவனமான IRNA, அமெரிக்காவின் F-15 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் போர் விமானம் தீப்பிடித்து எரிந்தபடி சுழன்று கீழே விழுவது போன்ற காட்சிகள் உள்ளன.
https://x.com/SputnikInt/status/2028335528945340517?
விமானம் கீழே விழுவதற்கு முன்பே, அதிலிருந்த இரண்டு விமானிகளும் பாராசூட் மூலம் பத்திரமாக குதித்தனர். அவர்கள் இருவரும் குவைத் அதிகாரிகளால் மீட்கப்பட்டு பாதுகாப்பாக இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுட்டு வீழ்த்தப்பட்டதா அல்லது விபத்தா?: ஈரான் இதனைத் தாங்கள் சுட்டு வீழ்த்தியதாகக் கூறினாலும், அமெரிக்கத் தரப்பிலிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வரவில்லை. சில பாதுகாப்பு நிபுணர்கள், இது ஈரானின் தாக்குதலாக இருக்கலாம் அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருக்கலாம் எனக் கருதுகின்றனர்.
ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா அலி காமேனியின் மறைவைத் தொடர்ந்து, ஈரான் தனது ‘ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் 4’ (Operation True Promise 4) மூலம் அமெரிக்கத் தளங்களைக் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தச் சூழலில் இந்த விமான விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
