தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், ஆளும் திமுக தரப்பு காங்கிரஸுக்கு ஒரு இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளதாகத் தெரிகிறது. இது குறித்து செவ்வாய்க்கிழமைக்குள் (இன்று) இறுதி முடிவை எடுக்குமாறு திமுக அறிவுறுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு 25 முதல் 28 சட்டமன்றத் தொகுதிகளுடன், ஒரு ராஜ்யசபா இடத்தையும் ஒதுக்க திமுக உறுதியாக உள்ளது. ஆனால், காங்கிரஸ் தரப்போ 34 தொகுதிகளுக்குக் குறைவாக எதையும் ஏற்க முடியாது என்பதில் பிடிவாதமாக இருக்கிறது
இந்த விவகாரத்தை நன்கு அறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ராஜ்யசபா இடங்கள் மற்றும் வேட்பாளர்களை இறுதி செய்ய வேண்டியிருப்பதால், செவ்வாய்க்கிழமைக்குள் இது குறித்து முடிவெடுக்குமாறு காங்கிரஸ் மேலிடத்தை திமுக கேட்டுக்கொண்டுள்ளது. ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 5-ம் தேதியுடன் முடிவடைவதால், அதற்கு முன்பாகவே கூட்டணியை உறுதி செய்ய திமுக விரும்புகிறது. காங்கிரஸ் தனது பதிலை இன்று மாலைக்குள் தெரிவிக்காவிட்டால், ராஜ்யசபா வேட்பாளர்களை திமுக தன்னிச்சையாக அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
தொகுதிப் பங்கீட்டில் நிலவும் இழுபறிக்கு மத்தியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு காங்கிரஸ் மேலிடம் தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களுடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தியது. திமுக-வுடனான கூட்டணி மற்றும் தொகுதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து அவர்களின் கருத்துகள் கேட்கப்பட்டன. இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “பெரும்பாலான எம்.எல்.ஏ-க்கள் திமுக கூட்டணியைத் தொடரவே விரும்புகின்றனர். இருப்பினும், 2021 தேர்தலை விட கூடுதல் தொகுதிகளைப் பெற வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர்,” என்று தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரைத் தொலைபேசியில் அழைத்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். முன்னதாக, ராகுல் காந்தி தனது ‘X’ தளத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி, வழக்கமான நெருக்கமான வார்த்தைகள் இன்றி இருந்ததாகக் கூறி அரசியல் வட்டாரங்களில் பல்வேறு யூகங்கள் எழுந்தன. ஆனால், இந்தத் தொலைபேசி அழைப்பு அந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்தது.
இருப்பினும், இந்தத் தொலைபேசி உரையாடலின் போது தொகுதிப் பங்கீடு அல்லது அரசியல் ரீதியான விவாதங்கள் எதுவும் நடைபெறவில்லை என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது முழுக்க முழுக்க ஒரு மரியாதை நிமித்தமான வாழ்த்து அழைப்பாகவே அமைந்தது. ராகுல் காந்தியின் வாழ்த்துச் செய்தி சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தத் தொலைபேசி உரையாடல் இரு தலைவர்களுக்கும் இடையிலான தனிப்பட்ட நட்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
திமுக அமைப்புச் செயலாளரும், தொகுதிப் பங்கீட்டுக் குழுவின் உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதி ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: “திமுக தரப்பில் ஒதுக்கப்பட்ட தொகுதிகளை ஏற்பது குறித்து காங்கிரஸ் தரப்பிலிருந்து இன்னும் எங்களுக்கு எந்தப் பதிலும் வரவில்லை. திமுக-வால் காலவரையன்றி காத்திருக்க முடியாது.
எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் தெளிவுபடுத்திவிட்டோம். அவர்களிடமிருந்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வந்த பின்னரே எங்களால் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும். நாங்கள் ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவிக்க வேண்டியுள்ளது; அந்த வேட்பாளர்கள் வரும் வெள்ளிக்கிழமைக்குள் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.
இருப்பினும், டெல்லியில் உள்ள மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கூறுகையில், தங்களது கோரிக்கைகளை திமுக ஏற்கும் வரை தாங்கள் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர். “நாங்கள் கூடுதல் தொகுதிகளைக் கேட்டுள்ளோம், ஆனால் அவர்கள் இன்னும் பதிலளிக்கவில்லை. அவர்களது முன்மொழிவை நாங்கள் இதுவரை ஏற்கவில்லை” என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்தார். “குறைந்தது 33 அல்லது 34 தொகுதிகளாவது கிடைக்காவிட்டால் (கூட்டணியைத் தொடர்வது) கடினமாக இருக்கும்” என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், இந்தத் தேர்தலில் கடைசி நேரத்தில் காங்கிரஸ் ஒரு “பிரச்சனைக்குரிய” கட்சியாக மாறக்கூடும் என்பதைத் தாங்கள் ஏற்கனவே உணர்ந்துவிட்டதாக திமுகவின் மூத்த நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
இது குறித்து ஒரு மூத்த திமுக நிர்வாகி கூறுகையில், “நாங்கள் இதனை நீண்ட காலத்திற்கு முன்பே கணித்துவிட்டோம். அதனால்தான் தேமுதிக-வுடன் கூட்டணி அமைத்தோம், ஓ. பன்னீர்செல்வத்தையும் கட்சியில் இணைத்துக்கொண்டோம். காங்கிரஸால் குறிப்பிட்ட சில பகுதிகளில் எங்களுக்கு வாக்குகள் குறைந்தாலும், அதனை தேமுதிக மற்றும் ஓபிஎஸ் மூலம் மற்ற பிராந்தியங்களில் ஈடுகட்டிவிடுவோம்,” என்று தெரிவித்தார்.
அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற முதற்கட்டத் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின் போது, 2021 தேர்தலில் போட்டியிட்டதை விட கூடுதலாக 6 தொகுதிகள் சேர்த்து, மொத்தம் 12 இடங்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) கோரியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகாரப் பகிர்வு குறித்த தனது கருத்தைத் தெரிவித்த விசிக தலைவர் தொல். திருமாவளவன், தனது கட்சி ஆட்சியில் பங்கு கோரி அழுத்தம் கொடுக்காது என்று கூறினார். ‘ஒரே நேரத்தில் பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் கட்சி விசிக அல்ல. மதவாத சக்திகள் மாநிலத்திற்குள் நுழைவதைத் தடுக்கவும், அவர்களைத் தோற்கடிக்கவுமே இந்த மதச்சார்பற்ற கூட்டணி உருவாக்கப்பட்டது’ என்றும் அவர் தெரிவித்தார்.
