மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் அங்கு பணியில் இருந்த 6 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானின் இந்த அதிரடித் தாக்குதலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன், அமெரிக்கா இதற்குப் பதிலடி கொடுக்கத் தயாராகி வருவதால் போர் மூளும் அபாயம் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள போரில் உயிரிழந்த தங்களது முதல் துருப்புக்களின் பெயர்களை அமெரிக்க ராணுவம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, குவைத்தில் உள்ள ஷுவைபா துறைமுகத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கட்டுப்பாட்டு மையத்தின் மீது ஈரானின் ‘ஆளில்லா விமானம்’ நடத்திய தாக்குதலில் 6 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். வான் பாதுகாப்பு அமைப்புகளை மீறி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு முதலில் வெளியிட்ட தகவலில், 3 வீரர்கள் மட்டுமே பலியானதாகக் கூறப்பட்டது. ஆனால், படுகாயமடைந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது மற்றும் இடிபாடுகளுக்கு இடையில் மேலும் இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் திங்களன்று உறுதிப்படுத்தினர். உயிரிழந்தவர்களில் 4 பேர் அயோவாவைச் சேர்ந்த ‘ஆர்மி ரிசர்வ்’ பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது ஒரு புதிய போரைத் தொடங்கியுள்ள நிலையில், இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட அமெரிக்க ராணுவத்தின் ஒரே உயிரிழப்பு இதுவேயாகும். உயிரிழந்தவர்களில் கேப்டன் கோடி ஏ. கோர்க் (35), சார்ஜென்ட் நோவா எல். டைட்ஜென்ஸ் (42), சார்ஜென்ட் நிக்கோல் எம். அமோர் (39) மற்றும் 20 வயதான சார்ஜென்ட் டெக்லான் ஜே. கோடி ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எஞ்சிய இருவரின் பெயர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
