அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றத்திற்கு மத்தியில், ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா இந்தியத் துறைமுகங்கள் அல்லது கடற்படைத் தளங்களைப் பயன்படுத்துவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களை வெளியுறவுத்துறை அமைச்சகம் (MEA) முற்றிலுமாக மறுத்துள்ளது. இந்தச் செய்திகள் முற்றிலும் பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை என்று அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ‘ஒன் அமெரிக்கா நியூஸ் நெட்வொர்க்’ (OANN) என்ற செய்தி நிறுவனத்தில், அமெரிக்க முன்னாள் ராணுவ கர்னல் டக்ளஸ் மெக்கிரேகர் அளித்த பேட்டியொன்றில், அமெரிக்காவின் தளங்கள் அழிக்கப்பட்டுவிட்டதால் அவர்கள் இந்தியத் துறைமுகங்களைச் சார்ந்து இருப்பதாகக் கூறியிருந்தார். இது குறித்து எக்ஸ் தளத்தில் விளக்கமளித்துள்ள வெளியுறவு அமைச்சகத்தின் உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு (MEA FactCheck), “இந்தியத் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை பயன்படுத்துவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் போலியானவை. இத்தகைய அடிப்படையற்ற கருத்துக்களை மக்கள் நம்ப வேண்டாம்” என்று எச்சரித்துள்ளது.
இந்தியா எப்போதும் இந்தப் போரில் நடுநிலை வகிப்பதாகவும், எக்காரணம் கொண்டும் தனது நிலப்பரப்பு, துறைமுகங்கள் அல்லது வான்வெளியை மற்ற நாடுகளின் ராணுவத் தாக்குதலுக்கு அனுமதிக்காது என்றும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஈரானிய போர்க்கப்பல் ‘ஐரிஸ் தேனா’ அமெரிக்காவால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கும், இந்தியத் துறைமுகங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இப்பிராந்தியத்தில் உள்ள சுமார் ஒரு கோடி இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி விநியோகச் சங்கிலி பாதிக்கப்படாமல் இருக்க பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது.
