மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஜனாதிபதி திரௌபதி முர்மு குறித்து தெரிவித்த சில கருத்துக்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி அவரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மேற்கு வங்க மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். மேற்கு வங்கத்தில் சாந்தால் மாநாடு நடைபெற்றது. இதில் திரௌபதி முர்மு பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி முதலில் பிடாநகரில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் நிகழ்ச்சி கோஷிபுர் பகுதிக்கு மாற்றப்பட்டது. இதனால், பழங்குடியின மக்கள் அதிகம் பேர் இதில் பங்கேற்கவில்லை.
இதனைக் கவனித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ஏன் திடீரென நிகழ்ச்சி நடைபெறும் இடம் மாற்றப்பட்டது? என் மீது மம்தா பானர்ஜி அதிருப்தியில் உள்ளாரா? மம்தா பானர்ஜியோ அல்லது அமைச்சரவை சகாக்களோ என்னை வரவேற்க வரவில்லையே என்று சுட்டிக்காட்டி பேசினார்.
https://x.com/narendramodi/status/2030288345432244576?
இந்தநிலையில், ஜனாதிபதி திரௌபதி முர்முவை மம்தா பானர்ஜி அவமதித்ததாகக் கூறி, அதை “வெட்கக்கேடானது” மற்றும் “இந்திய அரசியலில் முன்னெப்போதும் இல்லாத ஒன்று” என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
ஒரு பழங்குடியினப் பெண் நாட்டின் மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவியில் இருப்பதை திரிணாமுல் காங்கிரஸ் தலைவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதை இது காட்டுகிறது என்று பிரதமர் சாடினார்.
இந்தச் செயல் ஜனாதிபதியை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தப் பழங்குடியின சமூகத்தையும் மற்றும் நாட்டின் பெண்களையும் அவமதிப்பதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். மேற்கு வங்கத்தில் நடைபெறவிருக்கும் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமரின் இந்த விமர்சனம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
