மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு பங்கேற்ற நிகழ்ச்சி தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதில் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது, சிலிகுரியில் நடைபெற்ற 9-வது சர்வதேச ஆதிவாசி சந்தால் மாநாட்டிற்கு ஜனாதிபதியை அழைத்தது ஒரு தனியார் அமைப்பு (சர்வதேச சந்தால் கவுன்சில்). இது அரசு நிகழ்ச்சி அல்ல.
ஜனாதிபதி வருகையின் போது சிலிகுரி மேயர், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் ஆகியோர் அவரை முறையாக வரவேற்று வழிஅனுப்பி வைத்தனர். எனவே, மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் எவ்வித பாதுகாப்பு அல்லது புரோட்டோகால் விதிமீறல்களும் நடைபெறவில்லை.
நாட்டின் மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவியில் இருக்கும் ஜனாதிபதியை, பாஜக தனது அரசியல் ஆதாயத்திற்காகவும், கட்சி அஜெண்டாவிற்காகவும் தவறாகப் பயன்படுத்துவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது ஜனாதிபதி பதவியை அவமதிக்கும் செயலாகும்.
பாஜக ஆளும் மாநிலங்களில் பழங்குடியினருக்கு எதிராக நடக்கும் அநீதிகள் குறித்து ஜனாதிபதி ஏன் கேள்வி எழுப்பவில்லை? தேர்தலை முன்னிட்டு பாஜகவின் அறிவுரைப்படி செயல்படுவதைத் தவிர்த்து, ஜனாதிபதி பதவியின் மாண்பைக் காக்க வேண்டும்.
