நமது அன்றாட வாழ்வில் பிரிக்க முடியாத ஒன்றாக மாறிவிட்ட பாத்திரங்களைக் கழுவும் திரவங்கள் (Dishwash Liquids) குறித்து, மும்பையைச் சேர்ந்த பிரபல எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும், சுகாதாரக் கல்வியாளருமான டாக்டர் மனன் வோரா அதிரடியான விழிப்புணர்வுத் தகவலை வெளியிட்டுள்ளார்.
பாத்திரங்களைக் கழுவும் திரவம் (Dishwashing liquid) என்பது நாம் பெரிய அளவில் கேள்வி கேட்காத பொருட்களில் ஒன்று. அது சிங்க் அருகே அமர்ந்து, ஒவ்வொரு நாளும் பயன்படுத்தப்பட்டு, தன் வேலையைச் செய்கிறது. தட்டுகள் சுத்தமாகின்றன, கைகள் சுத்தமாகின்றன, வேலை முடிகிறது. ஆனால், நாம் எதில் சாப்பிடுகிறோமோ, அந்தப் பொருட்களுடன் இது நேரடியாகத் தொடர்பில் இருக்கிறது என்பதுதான் உண்மை. துரதிர்ஷ்டவசமாக, அந்த ஒரு விஷயம் பெரும்பாலும் நம்மால் அலட்சியப்படுத்தப்படுகிறது.
மும்பையைச் சேர்ந்த எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் மனன் வோரா, நாம் அன்றாடம் பயன்படுத்தும் பாத்திரங்களைக் கழுவும் சோப்பு திரவங்களில் உள்ள நச்சுத் தன்மை குறித்த உண்மையை இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
கடந்த மார்ச் 25 அன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “டிஷ்வாஷ் திரவங்களைப் பற்றிய அழுக்கான உண்மை” (Dirty truth about dishwash liquids) என்ற தலைப்பில் அவர் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், நாம் சாதாரணமாகக் கடந்து செல்லும் இந்தத் திரவங்களின் பின்னணியில் உள்ள ஆரோக்கியக் கேடுகளை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
டாக்டர் வோராவின் கூற்றுப்படி, பரவலாகப் பயன்படுத்தப்படும் பல பாத்திரம் கழுவும் திரவங்களில் ஐசோதியாசோலினோன்கள் ( isothiazolinones ) எனப்படும் வேதிப்பொருட்கள் உள்ளன. இவை நுண்ணுயிரிகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகச் சேர்க்கப்படும் செயற்கைப் பாதுகாப்பிகளாகும்.
மேலும், “உங்கள் சமையலறையில் உள்ள பொருட்களிலேயே பாத்திரம் கழுவும் திரவம் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்ததாக இருக்கலாம். பல பிரபலமான பாத்திரம் கழுவும் திரவங்களில் ஐசோதியாசோலினோன்கள் எனப்படும் வேதிப்பொருட்கள் உள்ளன, அவை தோலில் கடுமையான ஒவ்வாமையை உண்டாக்கும் காரணிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.” இந்தச் சேர்மங்கள் சிலருக்கு ஒவ்வாமை எதிர்வினைகளையும், தொடு தோல் அழற்சியையும் தூண்டக்கூடும் என்றும் அவர் மேலும் கூறினார்.
இந்த உட்பொருட்கள் ஒன்றும் அசாதாரணமானவை அல்ல. இவை பல்வேறு தயாரிப்புகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுபவைதான். ஆனால், அவை எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன என்பதற்காகவே, அவை பாதிப்பற்றவை (Risk-free) என்று அர்த்தமாகிவிடாது.”
பாத்திரங்களைக் கழுவும் திரவங்களால் ஏற்படும் பாதிப்புகள் வெறும் மேலோட்டமானவை அல்ல. சில குறிப்பிட்ட டிஷ்வாஷ் திரவங்களில் உள்ள ரசாயனங்கள், மனித உடலின் நாளமில்லாச் சுரப்பி மண்டலத்தை (Endocrine system) பாதிக்கக்கூடியவை (Endocrine-disrupting effects) எனச் சில ஒழுங்குமுறை ஆய்வுகள் (Regulatory studies) கவலை தெரிவித்துள்ளதாக டாக்டர் வோரா சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “குழந்தைகள் தற்செயலாக செறிவூட்டப்பட்ட (Concentrated) பாத்திரங்களைக் கழுவும் திரவத்தைக் குடித்துவிட்டு, அதன் விளைவாக உடலின் உட்புற மென்மையான திசுக்களில் கடுமையான காயங்களுக்கு உள்ளான சம்பவங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன,” என்று தெரிவித்தார்.
“இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடப்பவை அல்ல என்றாலும், இந்தத் தயாரிப்புகளைக் கவனமாகக் கையாளவில்லை என்றால், அவை எந்த அளவிற்குப் பாதிப்பை (Level of exposure) ஏற்படுத்தக்கூடும் என்பதை இது தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது.”
பாத்திரங்களைக் கழுவும்போது நாம் கவனிக்கும் ஒரு விஷயம், தட்டில் இருக்கும் அழுக்குகள் நீங்குகிறதா என்பதுதான். ஆனால், அந்த அழுக்குகளை நீக்கப் பயன்படுத்தும் திரவம் (Dishwashing liquid) முழுமையாக நீங்குகிறதா? என்பதுதான் இங்கு மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
டாக்டர் வோரா குறிப்பிடுகையில், “பாத்திரங்களைக் கழுவிய பிறகு அந்தத் திரவத்தின் எச்சங்கள் முழுமையாக நீங்குவதில்லை; தட்டுகள் மற்றும் பிற பாத்திரங்களில் அதன் சிறிய அளவிலான துகள்கள் ஒட்டிக்கொண்டிருக்க வாய்ப்புள்ளது,” என்று தெரிவித்தார்.
இது ஒரு சிறிய விஷயமாகத் தோன்றலாம். ஆனால் நீண்ட கால அடிப்படையில், மீண்டும் மீண்டும் ஏற்படும் இத்தகைய சிறிய அளவிலான பாதிப்புகள் (Exposure) பெரிய அளவில் சேரக்கூடும். குறிப்பாக, குழந்தைகள் மற்றும் செல்லப் பிராணிகள் உள்ள வீடுகளில் இது மிக முக்கியமான விஷயமாகும்.”
மாற்றுவழிகள் என்ன? “எளிமையான, தாவர அடிப்படையிலான (Plant-based) தயாரிப்புகளுக்கு மாறுவது ஒரு பாதுகாப்பான மாற்றாக அமையும். இந்தத் தயாரிப்புகள், கடுமையான ரசாயனங்களுக்குப் பதிலாகத் தாவரங்களிலிருந்து பெறப்படும் சர்பாக்டான்ட்கள் (Surfactants) மற்றும் இயற்கை பயோ-என்சைம்களைப் (Bio-enzymes) பயன்படுத்தி பாத்திரங்களில் உள்ள பிசுபிசுப்பை நீக்குகின்றன,” என்று தெரிவித்தார்.
“மென்மையான மற்றும் மிகக் குறைவான உட்பொருட்களைக் (Minimal ingredients) கொண்ட தயாரிப்புகளை உருவாக்குவதில் தற்போது பல நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். இங்கு நோக்கம் என்பது நூறு சதவீதம் குறையற்ற ‘பெர்பெக்ஷன்’ அல்ல; மாறாக, சாத்தியமான இடங்களில் தேவையற்ற ரசாயனப் பாதிப்புகளைக் (Exposure) குறைப்பதே ஆகும்.”
