தமிழகத்தில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றுள்ள சூழலில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக அனுபவமில்லாத ராஜ்மோகன் நியமிக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்திருந்த நடிகர் விஷாலுக்கு, முதலமைச்சரின் முடிவில் யாரும் தலையிடக்கூடாது என நடிகர் அருண் விஜய் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக ராஜ்மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் குறித்து நடிகர் விஷால் தனது எக்ஸ் தள பக்கத்தில் வருத்தத்தையும், புதிய அரசுக்கான சில கோரிக்கைகளையும் பகிர்ந்திருந்தார்.
அதாவது, முதலமைச்சர் விஜய் அமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்கீடு செய்தது மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள விஷால், செய்தித்துறை அமைச்சராக ராஜ்மோகன் நியமிக்கப்பட்டது ஏமாற்றம் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். “சினிமா துறையில் பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினைகளைக் கையாள, அனுபவம் இல்லாத ராஜ்மோகன் எப்படி சரியாக இருப்பார்?” என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
https://x.com/AVinthehousee/status/2055939361049550854
விஷாலின் இந்த விமர்சனத்திற்கு நடிகர் அருண் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் பதிலடி கொடுத்துள்ளார். முதலில் மக்களிடம் நன்மதிப்பைப் பெற்று, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, அதன் பிறகு நீங்கள் நினைப்பதைச் செய்யுங்கள். தயவுசெய்து அரசின் முடிவுகளில் தலையிட வேண்டாம். அவரும் நம் திரைத்துறையைச் சேர்ந்தவர் என்பதால், கண்டிப்பாக நம்முடைய பிரச்சினைகள் அவருக்குத் தெரியும்; நமக்காக நிச்சயம் உதவுவார். எனவே, அவரது நியமனத்தை மதித்து, என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். இப்போதே அவசரப்பட்டு முடிவுக்கு வர வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
