தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவின் ஒரு அடையாளம் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எனலாம். தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் ரஜினி, நெல்சனுடன் இணைந்து நடித்திருந்த ஜெயிலர் திரைப்படம் கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. சுமார் ரூ.600கோடி வரை வசூலையும் ஈட்டியது.
இந்த மெகா ஹிட் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. உள்நாடு மற்றும் வெளிநாடு என படப்பிடிப்புகள் நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் படப்பிடிப்புகள் முடிவடைந்தது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
அதன்படி, ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ‘ஜெய்லர் 2’ திரைப்படம் வரும் அக்டோபர் 15ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. முதல் பாகத்தில் ‘முத்துவேல் பாண்டியன்’ என்ற ஓய்வு பெற்ற ஜெய்லர் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்த விதம் ரசிகர்களை கவர்ந்திருந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் கதைக்களம் இன்னும் கூடுதல் ஆக்ஷன் மற்றும் திருப்பங்களுடன் இருக்கும் என்று படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகலாம் என்பதால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
