தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் தனது முதற்கட்டப் பரப்புரையை தவெக தலைவர் விஜய் மேற்கொண்டார். அங்குத் திரண்டிருந்த தொண்டர்களிடையே உரையாற்றி முடித்த கையோடு, திட்டமிட்டபடி அடுத்ததாக வில்லிவாக்கம் பகுதியில் தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவை ஆதரித்து அவர் பரப்புரை செய்ய வேண்டியிருந்தது. ஆனால், கொளத்தூர் நிகழ்வு முடிந்தவுடன் விஜய் திடீரென தனது நீலாங்கரை இல்லத்திற்குத் திரும்பிச் சென்றார். இதனால் வில்லிவாக்கத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தவெக தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர்.
விஜய்யின் இந்த பிரச்சார பயண ரத்து குறித்துத் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார். அதில், “வில்லிவாக்கம் பகுதியில் நிலவிய கடுமையான கூட்ட நெரிசல் மற்றும் காவல்துறையின் போதிய பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமாகவே விஜய்யின் பரப்புரை ரத்து செய்யப்பட்டது” என்று தெரிவித்துள்ளார். மேலும் ரத்து செய்யப்பட்ட பரப்புரைக்கான மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் அண்ணாநகரில் விஜய் பரப்புரை செய்யவில்லை.. இன்று அறிவிக்கப்பட்ட 4 இடங்களில் 2 இடங்களில் விஜய் பிரச்சாரம் செய்யவில்லை. விஜய்யின் இந்தத் திடீர் முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
