தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் தனது கட்சி தனித்துப் போட்டியிடும் என அறிவித்து வேட்பாளர்களையும் வெளியிட்டுள்ளார். இந்நிலையில், அங்குள்ள 22 முக்கிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள அக்கட்சி சார்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலைக் காரணம்காட்டி, காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் வெறும் 5 இடங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. மேலும், அந்த இடங்களிலும் தலா 2 மணி நேரத்திற்குள் பிரச்சாரத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தவெக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே சென்னையில் உள்ள பெரம்பூர் மற்றும் கொளத்தூர் பகுதிகளில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டபோது, கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. பாதுகாப்பு குறைபாடு காரணமாக விஜயால் தனது உரையை முழுமையாக ஆற்ற முடியாமல் பாதியிலேயே பிரச்சாரத்தை நிறுத்திச் செல்லும் சூழல் உருவானது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்கவும், தனது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் விஜய் ஒரு புதிய உத்தியைக் கையாள உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இனி வரும் நாட்களில் முக்கியமான ஒருசில தொகுதிகளுக்கு மட்டும் நேரில் செல்லும் விஜய், மற்ற தொகுதிகளுக்கு காணொலி வாயிலாகப் பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டுள்ளார். இதற்காக ஒவ்வொரு தொகுதியின் உள்ளூர் பிரச்சினைகளை முன்னிறுத்தி விஜய் பேசும் பிரத்யேக வீடியோக்கள் ஏற்கனவே தயாராகிவிட்டதாகக் கூறப்படுகிறது. தமிழகத்திலும் இதே போன்ற ‘வீடியோ கேம்பெயின்’ முறையைப் பின்பற்ற தவெக தலைமை ஆலோசித்து வருகிறது. நேரடிப் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதும், நெரிசல் ஏற்படுவதும் விஜய்யை இந்த டிஜிட்டல் பிரச்சார முடிவை நோக்கித் தள்ளியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
