தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரையின் ஒரு பகுதியாகத் தற்போதைய தேர்தல் காலங்களில் அதிகாலை நடைப்பயணத்தின் போது பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில், இன்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைப்பயணம் மேற்கொண்ட அவர், அங்குள்ள பொதுமக்களிடம் முகம் மலரப் பேசி வாக்குகளைச் சேகரித்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அங்கிருந்த ஒரு நெசவாளர் வீட்டிற்குள் சென்ற முதலமைச்சர், சிறிது நேரம் தறியில் அமர்ந்து புடவை நெய்து அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
தொடர்ந்து அந்த நெசவாளர் குடும்பத்தினருடன் அமர்ந்து அவர்களது குறைகளையும், தேவைகளையும் கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின், அவர்களுடன் கனிவாக உரையாடினார். இந்த நெகிழ்ச்சியான சந்திப்பு குறித்த வீடியோவை தனது ‘X’ சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், “எப்படி இருக்கு திராவிட மாடல் ஆட்சி? மக்களே எடைபோட்டுச் சொல்லும் பதில்கள்” என்ற வாசகத்தையும் பதிவிட்டுள்ளார். நெசவாளர் ஒருவரின் வாழ்வாதாரத்தோடு தன்னை இணைத்துக் கொண்டு முதல்வர் வாக்கு சேகரித்த இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
