நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் நிலவி வரும் ஜிஹாதி கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கத்தை ஒடுக்கும் நோக்கில், அந்நாட்டு விமானப்படை தீவிர வான்வழித் தாக்குதலை மேற்கொண்டது. கிளர்ச்சியாளர்களின் மறைவிடங்களை அழிப்பதே இலக்கு எனத் தொடங்கப்பட்ட இந்த நடவடிக்கையில், எதிர்பாராதவிதமாக இலக்கு தவறி மக்கள் நடமாட்டம் மிகுந்த ஒரு மார்க்கெட் பகுதியில் குண்டுகள் விழுந்து வெடித்தன. இந்த கோரத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 100 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
பாதுகாப்பு வழங்க வேண்டிய அரசே தவறுதலாகத் தன் சொந்த நாட்டு மக்கள் மீதே தாக்குதல் நடத்தியிருப்பது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. “மக்களைக் காக்க வேண்டிய அரசே இப்படி ஒரு பெரும் பிழையை இழைக்கலாமா?” என மனித உரிமை அமைப்புகளும் உலக நாடுகளும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. கிளர்ச்சியாளர்களைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் உளவுத்துறைத் தகவல்களில் ஏற்பட்ட குளறுபடியே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் எனக் கூறப்படும் நிலையில், இச்சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்நாட்டு மக்கள் பெரும் சோகத்திலும் கொந்தளிப்பிலும் ஆழ்ந்துள்ளனர்.
