விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எம்.ஜி.ஆர் விஜயகாந்த் பாணியைப் பின்பற்றுகிறது என நினைத்தால் அது முற்றிலும் தவறு. கள எதார்த்தத்தை உற்று நோக்கினால், 2014-ஆம் ஆண்டு நரேந்திர மோடி கையில் எடுத்த அதே அரசியல் தந்திரங்களை தான் விஜய் இப்போது தமிழ்நாட்டில் அச்சுப்பிசகாமல் நகலெடுக்கிறார். விஜய்யின் அரசியல் ஆசான் மோடிதான் என்பது அவருடைய ஒவ்வொரு நகர்விலும் அப்பட்டமாகத் தெரிகிறது.
பாஜகவில் எப்படி மோடியை விமர்சிக்க முடியாதபடி விசுவாசமிக்க ‘அந்தகப் பக்தி’ (Andh Bhakt) கொண்ட தொண்டர் படை இருக்கிறதோ, அதேபோல்தான் த.வெ.க-விலும் ஒரு தனிமனித துதிபாடல் கலாச்சாரம் கட்டமைக்கப்படுகிறது. தலைரின் தவறான நிலைப்பாடுகளையும், கொள்கை ரீதியான மௌனத்தையும், தார்மீகப் பொறுப்பின்மையையும் மறைக்க இந்தத் தொண்டர்களின் கண்மூடித்தனமான பக்தியே அவருக்கு இரும்புக் கவசமாகப் பயன்படுகிறது. தேசிய அளவில் மோடியை விமர்சித்தால் எப்படி ‘ஆன்டி-இந்தியன்’ என்று தேசத்துரோக முத்திரை குத்தப்படுகிறதோ, அதேபோல தமிழ்நாட்டில் விஜய்யை விமர்சித்தால் உடனே திமுகவுடன் தொடர்பு படுத்துவதியும்ம் முத்திரை குத்தியும் ஜனநாயக ரீதியான மாற்றுக்கருத்துகளை தடுக்கிறார்கள்.
மோடி எப்படி தன்னை ‘இந்து மதத்தின்’ காவலனாக முன்னிறுத்தி, அவரை எதிர்ப்பவர்களை ‘இந்து விரோதிகள்’ எனச் சித்தரித்தாரோ, அதே உத்தியை விஜய் வேறு வடிவத்தில் கையாளுகிறார். விஜய் தன்னை ‘மாற்றத்தின்’ ஒற்றைக் குறியீடாக முன்னிறுத்துகிறார். அவரை எதிர்ப்பவர்கள் அனைவரும் மாற்றத்திற்கு எதிரானவர்கள் என்ற ஒரு போலியான பிம்பத்தை உருவாக்குகிறார். முதல்முறை வாக்காளர்களை எந்தவொரு நிஜமான அரசியல் தெளிவோ, அடிப்படை மக்கள் பிரச்னைகள் மீதான புரிதலோ இன்றி, வெறும் சினிமா திரைக்கவர்ச்சியை மட்டுமே முதலீடாக வைத்து ஈர்க்கப் பார்க்கிறார். மாநில உரிமைகள் பறிக்கப்படும்போதும் சரி, நிஜமான மக்கள் பிரச்னைகளிலும் சரி, அதற்காகக் குரல் கொடுக்கவோ, அறிவை வளர்த்துக்கொள்ளவோ அவர் தயாராக இல்லை என்பதுதான் நிதர்சனம்.
2014-ல் மோடி எப்படி ‘ஊழலுக்கு எதிரான தூய சக்தி’ என ஒரு பிம்பத்தை உருவாக்கி ஆட்சியைப் பிடித்தாரோ, அதே வசனத்தைத்தான் விஜய்யும் மேடைகளில் முழங்குகிறார். ஆனால், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான செங்கோட்டையன் போன்றவர்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு “ஊழலை ஒழிப்பேன்” என விஜய் பேசுவது மோடியின் பிளேபுக்கில் உள்ள அதே வேடிக்கையான நாடகம்தான்.
மேலும், தமிழ்நாட்டின் ஆணிவேரான ‘திராவிடம்’ என்ற வார்த்தையைத் திட்டமிட்டுத் தவிர்த்துவிட்டு, சங் பரிவாரத்தின் அஜெண்டாவான ‘தமிழகம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது, மோடியைப் போலவே மறைமுகமாக மத அரசியலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த நினைப்பது என எல்லாமே அப்பட்டமான காப்பி-பேஸ்ட் அரசியக்தான். மோடி தலைமையிலான மத்திய அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக மௌனம் சாதித்துவிட்டு திமுகவை மட்டும் பூதாகரமான எதிரியாகக் காட்டுவது பாஜகவுக்கான பாதையை அமைத்துக்கொடுக்கும் தந்திரமே.
ஆனால், விஜய் மோடியை அப்படியே ‘காப்பி’ அடிப்பதில் காட்டும் ஆர்வத்தில் ஒரு உண்மையை மறந்தே போனார். இது தமிழ்நாடு! இங்கே வடமாநிலங்களைப் போல தனிமனித வழிபாட்டு ‘God Complex’ ஒருபோதும் எடுபடாது. “நான் கடவுளால் அனுப்பப்பட்டவன்” என்று மோடி பேசிய பேச்சுக்கள் தமிழ்நாட்டில் எப்படி எள்ளி நகையாடப்பட்டதோ, அதே நிலைதான் விஜய்க்கும்.
“உங்களுக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வந்துட்டேன்” என்று மணிக்கு நூறு முறை சொல்லி காட்டி, தான் தியாகம் செய்துவிட்டதாக மக்களை நம்ப வைக்கும் அரசியலைத் தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது. “நான் வந்ததே உங்களுக்குச் செய்த பெரிய உபகாரம், அதற்காக நீங்கள் எனக்குக் கடன் பட்டிருக்க வேண்டும்” என்கிற தொனியில் விஜய் கட்டமைக்கும் பிம்பம் தமிழ்நாட்டிற்கு ஏற்புடையதல்ல.
கொள்கையுள்ள தலைவர்கள் தரம்வாய்ந்த குடிமக்களை உருவாக்குவார்கள்; கொள்கையற்றவர்கள் வெற்று ரசிகர்களை மட்டுமே உருவாக்குவார்கள். மோடியின் ஜெராக்ஸ் காப்பியாக வலம்வரும் விஜய், தமிழ்நாட்டு அரசியலில் சங் பரிவார்களின் மறைமுகக் கருவி என்பதைக் காலம் உணர்த்தும்.
