தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், சென்னையில் வசிக்கும் பிற மாவட்ட மக்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றச் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காகப் போக்குவரத்துத் துறை விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இதற்காகத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் இன்று முதல் மூன்று நாட்களுக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் வசதிக்காகக் கோயம்பேடு, கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் ஆகிய முக்கியப் பேருந்து நிலையங்களிலிருந்து கூடுதல் சேவைகள் வழங்கப்படுகின்றன.
வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்த்து, சென்னையில் இருந்து மட்டும் மொத்தம் 5,574 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இன்று (ஏப்ரல் 21) வழக்கமான சேவைகளுடன் கூடுதலாக 1,404 பேருந்துகளும், நாளை (ஏப்ரல் 22) 3,570 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. மேலும், தேர்தல் நாளான நாளை மறுநாள் மதியம் ஒரு மணி வரை சுமார் 600 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்தப் பேருந்து நிலையங்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பயணிகள் எளிதாகப் பயணம் செய்யவும் தேவையான பாதுகாப்பு மற்றும் வழிகாட்டுதல் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
சொந்த ஊர் செல்வதற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை சுமார் 1.10 லட்சம் பேர் தங்களது பயணத்தைச் சீட் முன்பதிவு மூலம் உறுதி செய்துள்ளனர். இதில் இன்று பயணிக்க 40 ஆயிரம் பேரும், நாளை பயணிக்க 70 ஆயிரம் பேரும் முன்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. அரசு விரைவுப் பேருந்துகள் மற்றும் இதர மாவட்டப் பேருந்துகளில் எஞ்சியுள்ள இடங்களுக்கும் பயணிகள் விரைந்து முன்பதிவு செய்து, கடைசி நேரத் தவிப்பைத் தவிர்க்குமாறு போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
