மும்பையின் புகழ்பெற்ற வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில், சஞ்சு சாம்சனின் அபாரமான சதத்தின் உதவியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில், சஞ்சு சாம்சன் தொடக்கம் முதலே மும்பை பந்துவீச்சாளர்களை திணறடித்தார். வெறும் 54 பந்துகளில் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்த அவரது இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சதம், சென்னை அணி 207 ரன்களுக்கும் அதிகமான இமாலய இலக்கை எட்ட உதவியது. இதற்கு முன் ருதுராஜ் 88 ரன்கள் அடித்ததே, MI-க்கு எதிராக CSK வீரர் ஒருவர் குவித்த அதிக ரன்களாக இருந்தது. இந்த சீசனில் 293 ரன்கள் அடித்துள்ள அவர், ORANGE CAP ரேஸில் மூன்றாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
208 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. நட்சத்திர பேட்ஸ்மேன்கள் வரிசையாக ஏமாற்றம் அளிக்க, சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஆகிய இருவர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எட்டினர். இறுதியில், மும்பை அணி வெறும் 104 ரன்களுக்கு ஒட்டுமொத்தமாக சுருண்டது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் இணைந்திருப்பது இதுவே முதல் ஆண்டாகும்; இந்த அணியுடனான தனது முதல் சீசனிலேயே, சென்னை அணியின் வேறு எந்த பேட்ஸ்மேனும் இதற்கு முன் சாதிக்காத ஒரு சாதனையை அவர் நிகழ்த்திக் காட்டினார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராகச் சதம் அடித்த முதல் சென்னை அணி பேட்ஸ்மேன் என்ற பெருமையை சஞ்சு பெற்றார்.
ஒரே ஐபிஎல் (IPL) தொடரில் ஒன்றுக்கும் மேற்பட்ட சதங்களை அடித்த ஐந்தாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் சஞ்சு சாம்சன் பெற்றார். இதற்கு முன்னதாக, ஏப்ரல் 11 அன்று டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக அவர் ஆட்டமிழக்காமல் 115 ரன்கள் குவித்து ஒரு சதம் அடித்திருந்தார்.
வியாழக்கிழமை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், சென்னை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தபோதிலும், மறுமுனையில் சிறப்பாக பேட் செய்த சஞ்சு சாம்சன், ரன் விகிதத்தை சீராகத் தக்கவைத்துக்கொண்டார். 54 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 10 பவுண்டரிகள் உட்பட, ஆட்டமிழக்காமல் 101 ரன்களை சஞ்சு குவித்தார். இந்தச் சிறப்பான ஆட்டத்திற்காக அவருக்கு ‘ஆட்டநாயகன்’ விருது வழங்கப்பட்டது.
