டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் அரசுக்கு 397 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியது தொடர்பாக அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் மற்றும் அறப்போர் இயக்கம் அளித்த புகார்களை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம், உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021 முதல் 2023ஆம் வரையிலான காலகட்டத்தில் 45 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் ரூ. 397 கோடி முறைகேடு நடந்துள்ளதாவும், இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் இ.சரவணன் மற்றும் ராஜ்குமார், அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன் ஆகியோர் சார்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்குகளை தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, இந்த வழக்குகளின் தீர்ப்பை நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தனர்.
இந்நிலையில், இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு தொடர்பான புகார்களை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
