உழைப்பாளர் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தொழிலாளர்களின் உண்மைத் தோழனாக திமுக என்றென்றும் திகழ்ந்திடும் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “உழைப்பு என்பது மனித இனத்தின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, அதன் அரசியல், சமூகப் பரிணாமத்திற்கும் அடிப்படைக் காரணியாக இருக்கும் உந்து சக்தியாகும். உலகினை உழைப்பால் செலுத்தும், உலகினுக்குத் தங்கள் வியர்வையால் உயிரூட்டும் பாட்டாளி வர்க்கத்தினருக்கு எனது உழைப்பாளர் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தொழிலாளர்களுக்காக மே நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை, சென்னையில் மே தினப் பூங்கா, தொழிலாளர் நல வாரியம் என எண்ணற்ற பங்களிப்புகளைக் கழக ஆட்சிதோறும் பேரறிஞர் அண்ணா அவர்களும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் செய்து வந்தனர்.
‘தந்தை பெரியாரையும், பேரறிஞர் அண்ணாவையும் சந்தித்திருக்காவிட்டால் நானும் கம்யூனிஸ்டாகத்தான் ஆகி இருப்பேன்’ என்று சொன்ன தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தலைமையில் ஆட்சி அமைந்த போதெல்லாம் தொழிலாளர் நலம்காக்க எண்ணற்ற திட்டங்களைத் தீட்டி நிறைவேற்றியது வரலாற்றின் பக்கங்களில் பொன்னெழுத்துகளாக மின்னிக் கொண்டிருக்கிறது.
அந்த வழித்தடத்தில்தான் திராவிட மாடல் அரசிலும், இந்தியாவுக்கே வழிகாட்டும் பல தொழிலாளர் நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளோம். கழனியிலும் தொழிற்சாலைகளிலும் பாடுபடும் உழைப்பாளத் தோழர்களின் நலன்களைப் பாதுகாப்பது போலவே, தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்றுள்ள பெண்கள் மற்றும் திருநங்கைகள் புதிய ஆட்டோ ரிக்சா வாங்க மானியம், பதிவுபெற்ற அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கி, அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலன்களையும் பாதுகாக்கிறோம்.
உழைப்பையும், உழைப்போரையும் கொண்டாடும் இந்த மே நாளில், திராவிட முன்னேற்றக் கழகம் தொழிலாளர்களின் உண்மைத் தோழனாக என்றென்றும் திகழ்ந்திடும் என்ற உறுதியையும், உழைக்கும் தோழர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.
