எபோலா நோய் பரவல் எதிரொலியாக முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்காவில் எபோலா வைரஸ் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பு (WHO) இதை சர்வதேச அளவில் கவலையளிக்கும் பொது சுகாதார அவசரநிலையாக (PHEIC) அறிவித்துள்ளது. காங்கோ மற்றும் உகாண்டா நாடுகளில் பரவி வரும் பண்டிபுக்யோ வகை எபோலா தொற்று இதுவரை 246 சந்தேக நோயாளிகளையும் 80 சந்தேக மரணங்களையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக காங்கோவின் இடுரி மாகாணத்தில் இந்த நோய் தீவிரமாகப் பரவி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை எபோலா பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும், சர்வதேச பயணங்கள் மற்றும் வர்த்தகத் தொடர்புகளை கருத்தில் கொண்டு மத்திய சுகாதார அமைச்சகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்களுக்கு விரிவான வழிகாட்டுதல்கள் அனுப்பப்பட்டுள்ளன.
ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டம் (IDSP) மூலம், எபோலா பாதிப்புள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து சமீபத்தில் திரும்பிய பயணிகளை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. காய்ச்சல், தலைவலி, தசைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, உடல் பலவீனம் மற்றும் இரத்தப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள சுகாதார அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் எபோலா சிகிச்சைக்கான தயாரிப்புகள் முழுமையாக்கப்பட்டுள்ளன. பிரத்யேக தனிமை வார்டுகள், உயர் தர மருத்துவ உபகரணங்கள், பிரத்யேக ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் பயிற்சி பெற்ற மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. தொற்று கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என மருத்துவமனை நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புனேவில் உள்ள ICMR-தேசிய வைராலஜி நிறுவனம் (NIV) எபோலா சந்தேக மாதிரிகளை பரிசோதிக்க முழு தயார் நிலையில் உள்ளது. உயர் பாதுகாப்பு BSL-4 ஆய்வக வசதிகள் கொண்ட இந்த நிறுவனம் தேவைப்பட்டால் உடனடியாக செயல்படும்.
அனைத்து சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் வெப்ப பரிசோதனை, பயண விவர சரிபார்ப்பு மற்றும் சுய அறிவிப்பு படிவம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகள் 21 நாட்கள் சுய கண்காணிப்பில் இருக்க வேண்டும். அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மாவட்ட சுகாதார அதிகாரியை தொடர்பு கொள்ள வேண்டும். மாநில அளவில் விரைவுப் பதில் குழுக்கள் (RRTs) தயாராக உள்ளன. சுகாதாரப் பணியாளர்களுக்கு PPE கவச உடைகள் வழங்கப்பட்டு, தொற்று தடுப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அதுமட்டுமின்றி தவறான தகவல்கள் பரவாமல் தடுக்கவும், பொதுமக்களிடம் சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் விரிவான செயல்முறை வழிகாட்டுதல்களை (SOP) வெளியிட்டுள்ளது. இந்தியா தற்போது எபோலா அபாயத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் இருந்தாலும், தொடர் கண்காணிப்பும் தயார்நிலையும் மிக அவசியம் என சுகாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். பொதுமக்கள் பீதியடையாமல், அரசு வழங்கும் வழிகாட்டுதல்களை கண்டிப்புடன் பின்பற்றுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
