முதலமைச்சர் அறிவித்த பயிர்க்கடன் தள்ளுபடி எந்த பொருளாதார மேதை கொடுத்த ஐடியாவோ என அதிமுக எம்.எல்.ஏ ஓ.எஸ்.மணியன் கமெண்ட் அடித்துள்ளார்.
மே 25ஆம் தேதி, முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாட்டில் குறு, சிறு விவசாயிகளின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அதிகபட்சமாக ரூ.50ஆயிரமும் குறைந்த பட்சமாக ரூ.5ஆயிரமும் குறு மற்றும் சிறுவிவசாயிகளுக்கு தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது. முதலமைச்சரின் இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் வரவேற்பை கொண்டு வருவதற்குப் பதிலாக அதிருப்தியைத்தான் ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
தனது தேர்தல் அறிக்கையில் சிறுகுறு விவசாயிகளின் பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துவிட்டு இப்போது கண் துடைப்பு வேலை பார்த்திருப்பதாக விவசாயிகள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்ததோடு, இந்த தள்ளுபடியே தேவையில்லை என்னும் அளவுக்கு பேசுபொருளானது.
முதலமைச்சரின் அறிவிப்புக்கு அரசியல் கட்சியினரும் எதிர்ப்புகளை தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் அதிமுக எம்.எல்.ஏ ஓ.எஸ்.மணியன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தனது பங்குக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
தவெக தேர்தல் அறிக்கையில் விவசாயக் கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்படும் எனக் கூறிவிட்டு, தற்பொழுது இவ்வாறு அறிவித்துள்ளது விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
எந்த பொருளாதார மேதையிடம் முதலமைச்சர் இந்த ஆலோசனையைக் கேட்டார் என கமெண்ட் செய்தவர், இந்த நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை இல்லாத ஒரு மோசமான அறிவிப்பு இது எனவும் சாடினார்.
தேர்தல் வாக்குறுதியில் கூறியதை சொன்னபடி நிறைவேற்ற வேண்டாமா?.
அதைத்தானே விவசாயிகள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அதை நிறைவேற்ற வில்லை எனக் கூறியவர், ஜூ ன் 30-ம் தேதிக்குள் விவசாய கடன்கள் செலுத்தப்பட வேண்டும், அப்போதுதான் புதிய கடன் பெற முடியும் அதனால் பயிர்க்கடன் தள்ளுபடியை முதலமைச்சர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் அரசின் நடவடிக்கை உள்ளதாக வேதனை தெரிவித்தவரிடம், அதிமுகவில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து விட்டதா? என செய்தியாளர்கள் கேட்க, அதற்குப் பதில் அளிக்காமல் நழுவிச் சென்றார் ஓ.எஸ்.மணியன்.
