உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக, தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி. மோகனா அவர்களை நியமிக்க உச்சநீ திமன்றக் கொலீஜியம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.
இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான கொலீஜியம், மே 22 மற்றும் மே 27 ஆகிய தேதிகளில் நடைபெற்ற கூட்டங்களில், நான்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர் வி. மோகனா ஆகிய ஐவரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவி உயர்வு செய்யப் பரிந்துரைத்துள்ளது.

வழக்கறிஞர் பணியில் இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள மிகச் சிலரில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில், முன்னாள் நீதிபதி இந்து மல்கோத்ராவுக்குப் பிறகு, வழக்கறிஞர் பணியில் இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்கும் இரண்டாவது பெண்மணி எனும் பெருமையை வி. மோகனா பெறுவார்.
கோயம்புத்தூரைச் சேர்ந்த வி.மோகனா, பல ஆண்டுகளாக அரசியலமைப்புச் சட்டம், சிவில் மற்றும் சேவை சார்ந்த வழக்குகளில் ஆழ்ந்த அனுபவம் கொண்டவர். பல்வேறு முக்கிய வழக்குகளில் திறம்பட வாதாடியுள்ளார். ஏற்கெனவே, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர். பானுமதி அவர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இப்போது வி.மோகனாவின் இந்தப் பரிந்துரை, உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வலுவான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.
தற்போது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பி.வி. நாகரத்னா மட்டுமே பெண் நீதிபதியாக உள்ளார். வி. மோகனாவின் நியமனம் உச்ச நீதிமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை மேலும் அதிகரிக்கும். அண்மையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 34-ல் இருந்து 38 ஆக உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
