வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர் கூட்ட நெரிசலில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வைகாசி மாத விசாக நட்சத்திர தினத்தையொட்டி முருகப் பெருமானின் ஞான அவதார தினமான வைகாசி விசாகம் இன்று சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது. சூரபத்மனை வதம் செய்து தர்மத்தை நிலைநாட்டிய திருநாளாகவும், ஞானத்தின் அடையாளமாகவும் போற்றப்படும் இந்த நாளில், ஆறுபடை வீடுகளில் முதன்மையான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் அலை அலையாகத் திரண்டனர்.
காலை முதலே கோயில் வளாகம் பக்தர்களின் பெரும் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், குறிப்பாக மதுரை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் தரிசனத்திற்கு வந்திருந்தனர். கோயிலில் சிறப்பு அபிஷேகங்கள், மகா அபிஷேகம், விசேஷ பூஜைகள், ஊஞ்சல் சேவை உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் விமரிசையாக நடைபெற்றன. முருகனின் திருவுருவம் அலங்காரங்களுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தது.
எனினும், எதிர்பார்த்ததை விட அதிகமான பக்தர் வருகை காரணமாக கோயில் உள்ளே கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் வயதானவர்கள், பெண்கள் மற்றும் சிறுமிகள் உள்ளிட்ட பலர் மயக்கமடைந்து விழும் சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்தன. இந்தப் பரபரப்பான சூழலில் கோயில் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக போலீசார் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவ முகாம் மூலம் மயங்கியவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
மதுரை விளாங்குடியைச் சேர்ந்த பார்த்தசாரதி (53) என்பவர் தனது மனைவியுடன் தரிசனத்திற்கு வந்தபோது, கூட்ட நெரிசலில் மயக்கமடைந்தார். அருகில் இருந்த இந்து சமய அறநிலைத்துறை மருத்துவ முகாமில் முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், திருப்பரங்குன்றம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதேபோல் மற்றொரு மூதாட்டியும் நெரிசலில் மயங்கி விழுந்தார். மயங்கிய அனைவருக்கும் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பக்தர்கள் தரப்பில், “கோயில் நிர்வாகம் சார்பில் போதிய குடிநீர் வசதி, ஓய்வு இடங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. வெயில் மற்றும் நீண்ட நேரம் காத்திருப்பு காரணமாகவே இத்தகைய சம்பவங்கள் ஏற்படுகின்றன” என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிக பக்தர் வருகையை முன்னிட்டு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகளை உடனடியாக செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
வைகாசி விசாகம் முருக பக்தர்களுக்கு மிக முக்கியமான திருநாள். இந்த நாளில் திருப்பரங்குன்றம் முருகன் தரிசனம் செய்வது சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதிக நெரிசல் இருந்தபோதிலும், பக்தர்கள் பெரும் பக்தியுடன் முருகனை வழிபட்டு வருகின்றனர். கோயில் நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகள் சூழ்நிலையைக் கண்காணித்து வருகின்றனர்.
