நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், ஆறு மாதங்களை இலக்காக வைத்து பணியாற்ற முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தின் நகர்ப்புறங்களை சுத்தமான, பசுமையான மற்றும் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற சுகாதாரமான இடங்களாக மாற்றும் உயரிய நோக்கத்துடன் முதல்வர் விஜய் தீவிர நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளார். இதற்காக ஆறு மாத கால அவகாசத்தை நிர்ணயித்து, அதிகாரிகளுக்கு தெளிவான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். கடந்த ஆட்சியில் தனி அமைச்சர்கள் பொறுப்பேற்றிருந்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையை முதல்வர் விஜய் தானே நேரடியாகக் கண்காணித்து வருகிறார். இந்த முடிவு நகர்ப்புற அபிவிருத்திப் பணிகளுக்கு புதிய வேகத்தையும், பொறுப்புணர்வையும் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் நடைபெற்ற உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் அதிகாரிகளுக்கு விரிவான வழிகாட்டுதல்களை வழங்கினார். “நகராட்சி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஒவ்வொரு நாளும் காலையில் களத்துக்கு செல்ல வேண்டும்” என்று வலியுறுத்திய அவர், கமிஷனர் முதல் கீழ்மட்ட ஊழியர்கள் வரை அனைவரும் சாலைகள், வீதிகள், பொது இடங்களுக்கு நேரில் சென்று குப்பை குவியல்கள், கட்டடக் கழிவுகள், சுவர் போஸ்டர்கள், துண்டு பிரசுரங்கள் உள்ளிட்ட குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும், சாலையோரங்கள், சென்டர் மீடியன்கள் மற்றும் பொது இடங்களில் பசுமைப் பரப்பை பெருமளவு அதிகரிக்கும் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க அறிவுறுத்தினார். மரக்கன்றுகள் நடுதல், பூங்காக்களை மேம்படுத்துதல், செடி கொடிகளை வளர்ப்பது, நிழல் மரங்களைப் பாதுகாத்தல் போன்ற பணிகள் துரிதப்படுத்தப்படும். இதன் மூலம் நகரங்களின் வெப்பநிலையை குறைத்து, சுற்றுச்சூழலை மேம்படுத்த முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
குப்பை மேலாண்மையில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்த முதல்வர் வலியுறுத்தியுள்ளார். வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் குப்பையை மூலத்திலேயே தரம் பிரித்து (மக்கும் குப்பை, மக்காத குப்பை, மறுசுழற்சி பொருட்கள்) கொடுக்கும் பழக்கத்தை மக்களிடையே ஏற்படுத்த பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள், ஊக்கத் திட்டங்கள் மற்றும் பரிசுகள் வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும். தற்போதுள்ள ஒரே இடத்தில் குவித்து கொட்டும் முறையை முழுமையாக ஒழித்து, அறிவியல் சார்ந்த மறுசுழற்சி மற்றும் பாதுகாப்பான கழிவு அகற்றும் முறைகளுக்கு வேகம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த இலக்குகளை அடையத் தவறும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எச்சரித்துள்ளார். மேலும், எதிர்பாராத நேரங்களில் அவர் தானே பல்வேறு நகரங்களுக்கு நேரடியாக ஆய்வு செய்ய வருவார் என்பதால், அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகங்களும் உஷார்ப்படுத்தப்பட்டுள்ளன.
“நகர்ப்புறங்களை மக்கள் வாழ்வதற்கு ஏற்ற சுகாதாரமான, பசுமையான, அழகான இடங்களாக மாற்றுவதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கம்” என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் தமிழக நகரங்கள் சர்வதேச அளவில் பாராட்டத்தக்க முன்மாதிரியாக உருவெடுக்கும். அதிகாரிகளின் முழு ஈடுபாட்டுடன் ஆறு மாதங்களில் கணிசமான மாற்றத்தை காண முடியும் என்ற நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
