தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
சர்வதேச போதைப் பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை இணைந்து நடத்திய போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முன்னதாக, மாவட்ட அளவில் போதைப் பொருட்களின் அபாயங்கள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்று, போதைப் பழக்கத்தின் தீமைகளை உணர்ந்தனர். பின்னர், அமைச்சர் ராஜ்மோகன் போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியை வாசித்தார். பேரணியில் கலந்துகொண்ட அனைவரும் ஒரே குரலில் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
பேரணியில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்று, “போதை ஒழிப்பு – இளைய தலைமுறை மீட்பு”, “போதைக்கு அடிமையானால் எதிர்காலம் அழியும்”, “பள்ளியில் கல்வி, வாழ்வில் வெற்றி” போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர். போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் உடல், மனம், குடும்பம் மற்றும் சமூகத்துக்கு ஏற்படும் பெரும் தீங்குகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணி அமைந்தது.
பேரணிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “மத்திய அரசின் நிதிக்காக நாங்கள் இருமொழிக் கொள்கையில் எந்த சமரசத்துக்கும் தயாராக இல்லை. அதேசமயம், தமிழ்நாடு அரசு மத்திய அரசின் கல்வி நிதியைப் பெறாமல் இருக்கப் போவதும் இல்லை” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் கல்வித்துறையின் நிலை குறித்து பேசிய அவர், “தற்போது அனைத்து பாடப்பிரிவுகளிலும் சமச்சீர் சேர்க்கை இல்லாத நிலை உள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட புதிய பாடப்பிரிவுகளுக்கும், மருத்துவப் படிப்புகளுக்கும் மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது. அரசுப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என்று பாரபட்சம் காட்டாமல் இரு வகைப் பள்ளிகளின் வளர்ச்சிக்கும் தமிழ்நாடு அரசு முழு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது” என்றார்.
மேலும், “தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளை உயர்த்துவோம். இரண்டையும் இரு கண்களாகப் பார்க்கும் அரசு, தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கும். தமிழக மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் மேல்நிலைப் பள்ளிகளில் விரைவில் புதிய பாடப்பிரிவுகளைத் தொடங்க அரசு தீவிர ஆலோசனை செய்து வருகிறது” என்று கூறினார்.
பள்ளிகளில் மாணவர்களின் படிப்புக்கு இடையூறு செய்யும் திமுக நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்தார். “பள்ளி நேரங்களில் மாணவர்களுக்கு இடையூறு செய்யும் நிர்வாகிகளை எவ்வித சமரசமும் இன்றி கட்சியிலிருந்து விலக்குவோம். தொடர்ந்து அத்துமீறினால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
கல்வித்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்தும் அவர் விரிவாகப் பேசினார். “மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், தொடக்கக் கல்வி அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் பதவி உயர்வு மற்றும் கலந்தாய்வு மூலம் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும்” என்று உறுதியளித்தார்.
இந்த விழிப்புணர்வு பேரணி மூலம் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போதைப் பழக்கத்திலிருந்து விலகி, ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கி நடைபோட வேண்டும் என்பதே மாவட்ட நிர்வாகத்தின் நோக்கம்.
