அமலாக்ககத்துறையை வைத்து பாஜக செய்ததை காவல்துறையை வைத்து தவெக செய்வதாகவும், தமிழக அரசியலில் மோசமான உதாரணம் விஜய் எனவும், தி.மு.க. சட்டத்துறை இணைச் செயலாளரான வழக்கறிஞர் பரந்தாமன் விமர்சித்துள்ளார்.
திமுக முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன் அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ” திமுக மீது குதிரைப் பேரக் குற்றச்சாட்டை சுமத்த நினைத்த தவெக அரசின் முயற்சி முறியடிக்கப்பட்டிருப்பதாகவும், திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு மூலமாக விஜய் அரசினுடைய மூக்கு நீதிமன்றத்தால் அறுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
அமைச்சர் நிர்மல்குமார் மீது நில மோசடி வழக்கு உள்ளது, அவர் ஒரு 420 எனச் சீற்றம் காட்டியவர் தவெக ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர் மரிய வில்சன், முதலமைச்சர் விஜய் ஆகியோர் மீது வழக்குகள் உள்ளதைச் சுட்டிக்காட்டி தவெக அமைச்சரவை குற்றப்பின்னணி கொண்ட அமைச்சரவை எனக் குற்றம்சாட்டினார். இந்த அமைச்சரவை திமுகவைப் பற்றிப் பேச அருகதை இல்லை என்றார்.
அனிதா ராதாகிருஷ்ணனை எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவுக்கு வந்து விடும்படியும், அதற்குப் பணம் தருவதாகவும் அவரிடம் போலீசாரின் விசாரணையின்போது தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார். இது ஒரு மிகப்பெரிய குற்றச்சாட்டு.
6 மணி நேர விசாரணை இதற்காக தான் நடந்துள்ளதா.? பாஜக எப்படி அமலாக்கத்துறையை வைத்து மிரட்டி தங்கள் கட்சியில் சேர்க்கிறார்களோ ,அதேபோல்தான், தவெக அரசு காவல்துறையை வைத்து மிரட்டி கட்சிக்கு ஆள் சேர்க்கும் வேலையை செய்வதாக விமர்சித்தார். திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய சட்டமன்ற உறுப்பினரைப் பார்த்து ரவுடி என்றெல்லாம் சொல்ல அமைச்சர் நிர்மல் குமாருக்கு எந்த அருகதையும் இல்லை எனக் கூறினார்.
அதிமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஓஎஸ் மணியனிடம் ‘விஜய பாஸ்கர் அமைச்சர் பதிவி வாங்கிதருவதாக பேரம் பேசியதாகக் கூறிய பரந்தாமன், யார் குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார்கள் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்றார்.
திராவிட முன்னேற்ற கழகம் வென்று இருக்கிறது 59 இடங்கள். ஒரு எம்எல்ஏ, இரண்டு எம்எல்ஏ வை விலைக்கு வாங்கி எப்படி ஆட்சி அமைக்க முடியும் இந்த அடிப்படை புரிதல் கூட இல்லாமல் தவெக அமைச்சர்கள் எல்லாம் பேசுவது வடிகட்டியே பொய்.
மாற்றம் கொடுப்போம் என்று சொல்லிவிட்டு ஆட்சிக்கு வந்து அதிமுக கட்சியில இருப்பவரை தவெக கட்சியில சேர்க்கும் கட்சி மாற்றம் தான் நடந்துள்ளதாகவும், இன்னும் பல அதிமுக எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து ஆளும் கட்சியில் இணைக்கும் முயற்சியில் தான் இந்த அரசு உள்ளதாகவும் கூறினார்.
தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்த பரந்தாமன், ஒரு அரசியல் கட்சி எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு மிகப்பெரிய மோசமான உதாரணம் விஜய் எனக் குற்றம்சாட்டினார்.
