கர்நாடக அரசு மேகேதாட்டு அணை திட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில், “எவ்வளவு வலுவான அணை கட்டினாலும், காவிரி ஆறு அணையை உடைத்துக்கொண்டு தமிழ் மண்ணுக்குத்தான் வரும்; இயற்கையின் விதியை மாற்ற மத்திய அரசாலும், கர்நாடக அரசாலும் முடியாது” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
கும்பகோணம் அருகே சுவாமிமலையில் நடைபெற்ற இந்திய மாதர் தேசிய சம்மேளன மாநிலக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
ரேஷன் கடைகளில் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு உணவுப் பொருட்களின் அளவை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்திருப்பது ஏற்க முடியாதது என்றும், நெய்வேலி நிறுவனத்தின் 3 சதவீத பங்குகளை விற்பனை செய்யும் முடிவையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பதாகவும் அவர் கூறினார்.
விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், அதுவரை வசூல் நடவடிக்கைகளை நிறுத்த முதலமைச்சர் தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கரூரில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.
ஆளுநர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தில் தலையிடக் கூடாது என்றும், சட்டப்படி செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். தவெக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியில் இருந்து அரசியல் ரீதியாக ஆதரவு அளித்து வருவதாகவும், எந்த அதிகாரப் பதவியோ அல்லது பலனோ தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
அமைச்சரின் ஆங்கிலப் பேச்சு தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், “ஆங்கிலம் என்பது ஒரு மொழி மட்டுமே; அறிவு அல்ல. தாய்மொழி தமிழை வளர்க்கும் வகையிலேயே உரையாடியிருக்க வேண்டும்” என்றார்.
மேலும், டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்பட வேண்டும் என்றும், காவிரி, மேகேதாட்டு, மதச்சார்பின்மை மற்றும் தொழிலாளர் உரிமைகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 6 முதல் 15 வரை நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் மு. வீரபாண்டியன் தெரிவித்தார்.
