ரிசர்வ் வங்கி ஆஃப் இந்தியா (RBI) 2023 மே 19 அன்று நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.2,000 மதிப்புள்ள நோட்டுகளை படிப்படியாக திரும்பப் பெறும் முடிவை அறிவித்தது. அப்போது சுமார் ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் சந்தையில் இருந்தன. இந்த அறிவிப்புக்குப் பிறகு பொதுமக்கள் மற்றும் வங்கிகள் மூலம் பெருமளவில் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன.
2026 ஏப்ரல் 30 நிலவரப்படி, வெறும் ரூ.5,451 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதன் மூலம் மொத்தம் 98.47 சதவீத நோட்டுகள் வெற்றிகரமாக திரும்பப் பெறப்பட்டுள்ளன. இன்னும் சிலர் தங்கள் கைவசம் உள்ள நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்து வருகின்றனர்.
ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்படி, ரூ.2,000 நோட்டுகள் இன்னும் முழுமையாக செல்லுபடியாகும் நிலையிலேயே உள்ளன. எனவே, பொதுமக்கள் இந்த நோட்டுகளை தற்போதும் எந்த பிரச்சனையும் இன்றி மாற்றிக்கொள்ளலாம். ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கி கிளைகளிலும் இந்த மாற்று வசதி கிடைக்கிறது.மேலும், எளிதான வசதியாக இந்தியா போஸ்ட் மூலமும் இந்த சேவை வழங்கப்படுகிறது.
நாட்டில் உள்ள எந்த தபால் நிலையத்திலிருந்தும் 2,000 ரூபாய் நோட்டுகளை அனுப்பி வைக்கலாம். அவை சரிபார்க்கப்பட்ட பிறகு, அதற்குரிய தொகை அனுப்புநரின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இந்த நடைமுறை மூலம் கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ளவர்களுக்கும் எளிதாக நோட்டுகளை மாற்றும் வாய்ப்பு உருவாகியுள்ளது. ரிசர்வ் வங்கி, பொதுமக்களுக்கு எந்தவித அசௌகரியமும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்த செயல்முறை நாட்டின் பணப் புழக்கத்தை ஒழுங்குபடுத்தவும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும் உதவியுள்ளதாகக் கூறப்படுகிறது. இன்னும் கைவசம் 2,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பவர்கள் விரைவில் வங்கி அல்லது தபால் நிலையங்களை அணுகி மாற்றிக்கொள்ளுமாறு ரிசர்வ் வங்கி கோரிக்கை விடுத்துள்ளது.
