தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவருமான விஜய், 10 மாதங்களுக்குப் பிறகு கரூருக்கு மீண்டும் வருகை தருகிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி இதே பிரசார வாகனத்தில் நின்று பொதுமக்களைச் சந்தித்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோக சம்பவத்திற்குப் பிறகு, இன்று அதே வாகனத்தில் மீண்டும் மக்களைச் சந்திக்கிறார்.
கரூர் அருகே வெண்ணெய்மலைப் பகுதியில் அமைந்துள்ள அட்லஸ் கலையரங்க வளாகத்தில் இன்று காலை 11 மணியளவில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் இருந்து சிறப்பு ஏற்பாட்டில் இந்த பிரசார வாகனம் கொண்டு வரப்பட்டது.
நேற்றிரவே வாகனம் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டது. முதலமைச்சர் விஜய் இந்த வாகனத்தின் மீது நின்றுகொண்டு மக்களிடையே உரையாற்றவுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. பிரசார வாகனமும் சிபிஐ அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இந்நிலையில், சட்டசபைத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதலமைச்சராக விஜய் கரூருக்கு முதல் முறையாக வருகிறார். இன்று காலை 9.30 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்படும் முதலமைச்சர், திருச்சி விமான நிலையம் வழியாக கரூரை வந்தடைகிறார். அட்லஸ் கலையரங்கத்தில் மக்கள் சந்திப்பு முடிந்ததும், பிற்பகல் 1.15 மணியளவில் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் ரோடு ஷோ நடத்துகிறார்.
திருக்காம்புலியூர், கோவை சாலை, பழைய பேருந்து நிலைய ரவுண்டானா, லைட் ஹவுஸ் முனை, திருமாநிலையூர், தாந்தோணிமலை, காளியப்பனூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக சுற்றுலா மாளிகை வரை செல்லும் இந்த ரோடு ஷோவின்போது பொதுமக்களை நேரில் சந்தித்து உரையாட உள்ளார். ரோடு ஷோ முடிந்ததும் சுற்றுலா மாளிகையில் மதிய உணவு அருந்தும் முதலமைச்சர், பின்னர் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அப்போது, மணவாசி பகுதியில் ரூ.1,700 கோடி முதலீட்டில் அமையவுள்ள எவர்வென் கோத்தாரி புட்வேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இந்தத் திட்டம் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சம்பவத்திற்குப் பிறகு பாதுகாப்பு நெறிமுறைகளை கடுமையாகப் பின்பற்றி இந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சரின் இந்த வருகை கரூர் மாவட்ட மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
