பழநி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்த விவகாரம் தொடர்பாக, திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் பழநி அறநிலையத்துறை அதிகாரிகள் 5-க்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாஜிதா தீவிர விசாரணை மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி அடிவாரம் சந்நிதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறிப் போலி ஆவணங்கள் மூலம் வெறும் ரூ.2 கோடிக்கு மோசடிப் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து பழநி கோயில் நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் ச.முருகானந்தம் அளித்த புகாரின் பேரில், பழநி அடிவாரம் போலீசார் புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், போலி டிரஸ்ட் பிரமுகர் முருகதாஸ் உள்ளிட்ட 4 பேர் மீது கூட்டுச்சதி, மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து தமிழக அரசு இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தது. சிபிசிஐடி போலீசார் நேற்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து இருவருக்கும் மேற்பட்ட போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதன் தொடர்ச்சியாக, இன்று திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்ட பழநி அறநிலையத்துறை வழக்கு தாக்கல் செய்த முருகானந்தம், வருவாய்த்துறை சேர்ந்த தாசில்தார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட அதிகாரிகளிடம், மதுரையில் இருந்து வருகை தந்த சிபிசிஐடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாஜிதா நேரில் விசாரணை மேற்கொண்டார்.
இந்த விசாரணையின் மூலம் மோசடியில் தொடர்புடைய மேலும் பல முக்கியப் புள்ளிகள் குறித்த விபரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
