தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவருமான சூர்யா இன்று தனது 51வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 1997ஆம் ஆண்டு ‘நேருக்கு நேர்’ திரைப்படம் மூலம் அறிமுகமான அவர், இதுவரை 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளார். ‘காக்க காக்க’, ‘பிதாமகன்’, ‘கஜினி’, ‘வாரணம் ஆயிரம்’, ‘அயன்’, ‘சிங்கம்’, ‘24’, ‘சூரரைப் போற்று’, ‘ஜெய்பீம்’ உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்கள் அவரது வெற்றிப் பயணத்தை சிறப்பித்துள்ளன.
சமீபத்தில் வெளியான ‘கருப்பு’ படம் சூர்யாவுக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தது. இதன் பிறகு, ‘வாத்தி’ மற்றும் ‘லக்கி பாஸ்கர்’ படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ என்ற புதிய படத்தில் சூர்யா நடித்துள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட் 14 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஆனால், நடிகர் சூர்யா தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நீட் தேர்வு முறைகேட்டுக்கு எதிராக டெல்லியில் தொடர் போராட்டம்: தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறப்படும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனக் கோரி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த மாதம் 20ஆம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றுடன் இந்தப் போராட்டம் 33வது நாளை எட்டியது. மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் இந்த முறைகேட்டுக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை முழுமையாக தவிர்க்குமாறு ரசிகர்களுக்கு சூர்யா அறிவுறுத்தியுள்ளார். அவரது ரசிகர் மன்றம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், “மாணவர்கள் தங்கள் உரிமைகளுக்காக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், கொண்டாட்டங்கள் முறையல்ல” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சூர்யாவின் இந்த முடிவு திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது. மாணவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரின் இந்த சமூக உணர்வு நிறைந்த செயல், இளைஞர்களிடையே நல்லெண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.
